"என் `ஜக்குபாய்' முழுப் படமும் இணையத்தில் வெளியானபோது" - கே.எஸ்.ரவிக்குமார் ஆதங்கம் | Jaggubhai
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள `கர' படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது இப்படத்திற்காக பல பேட்டிகளை அளித்து வருகிறார். ஒரு பேட்டியில், `ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது பற்றி கேட்கப்பட, அதற்குப் பதில் அளித்த கே.எஸ்.ரவிக்குமார், "என்னுடைய `ஜக்குபாய்' முழுப் படமும் இன்டர்நெட்டில் வெளியானது. பெரிய போராட்டம் நடந்தது, ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்கள் முன்வந்து போராடினார்கள். அப்போதே அந்த வேதனையை அனுபவித்தேன். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கசிந்துவிட்டதால், தயாரிப்பாளர்கள் தரப்பினர் அப்படியே படத்தை மீண்டும் வெளியிடக்கூடாது என முடிவு செய்தார்கள். எனவே படத்தின் காட்சி வரிசையை முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டார்கள்.
வயசான கெட்டப் சார்ந்த காட்சிகள் எல்லாம் திரைக்கதையின் தவறான இடங்களில் வந்தது. பின்னர் எப்படி அந்தப் படம் ஓடும். அந்தப் படம் மொத்தமும் நாசமானது, எவ்வளவோ கஷ்டப்பட்டு செய்த படம். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸுக்காக மிகவும் கடினமாக உழைத்தோம். ஆனால், அது ஒன்றுமே இல்லாமல் போனதற்குக் காரணம் பைரஸிதான். அதனால்தான், ரஜினி சார், கமல் சார் மாதிரி பெரிய படங்கள் செய்யும்போது டப்பிங்கிற்கு அனுப்பும் பிரிண்ட்கூட பிளாக் & ஒயிட்தான் அனுப்புவேன்.
படத்தின் எஃபக்ட்ஸ்க்கு அனுப்பும்போது வசன ஆடியோ இல்லாமல் அனுப்புவேன். அவர்கள்கூட சவுண்ட் டிராக் கேட்பார்கள். ஆனால், நான் அனுப்பவே மாட்டேன். ஏனென்றால், எனக்கு ஒரு முழுப்படத்தையும் பைரஸிக்கு பறிகொடுத்த அனுபவம் இருக்கிறது. இப்படியாக நான் அதனை கண்ட்ரோல் செய்தேன்.
படத்தின் ஃபைனல் புராடெக்ட் வந்த பின்னர் ரிலீஸ் தள்ளிப் போனாலே இப்படியான ஆபத்துகள் வரும். இப்படியான ஆபத்து நடந்துவிட்டது, இதிலிருந்து அந்த தயாரிப்பாளர் மீண்டு வர வேண்டும். மக்களும் இந்தப் படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்" என்றார்.

