ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ், " ‘சர்கார்’ பட சமயத்தில் நடந்த விஷயம் இது. படத்தின் ஷூட் முடிந்தபின் நாங்கள் எல்லோரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தோம். நான், ஹீரோயின், பழ கருப்பையா ஆகியோர் பேட்டியில் இருந்தோம். அப்போது பாபு விஜயை, பழ கருப்பையா சார் அழைத்தார். `விஜய் பாபு, பேட்டியில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை' என அவர் சொல்ல, உடனே பாபு விஜய் என்ன சொல்வது என்ற விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். முடித்த பின்னர் `சார், நீங்க என்னை விஜய் பாபு என அழைக்கிறீர்கள், என் பெயர் பாபு விஜய்' என்றார். பழ கருப்பையா அவர் பேச்சில் மகிழ்ந்துவிட்டார்.
இப்போது பேட்டி ஆரம்பித்தது, அவர் பதில் தயார் செய்து வைத்திருந்த கேள்வியும் வந்தது. அந்தப் பதிலில் இவர் நடிக்க சம்மதித்த விஷயத்தைச் சொல்லுமபோது பல முறை பாபு விஜய் பெயரைச் சொல்லிச் சொல்லிப் பேசினார். படத்தின் இயக்குநர் என்னுடைய பெயரை ஒருமுறைகூடச் சொல்லவில்லை. பேட்டி முடிந்ததும் அவரிடம் நான் இதைக் கேட்க, `விடுங்க சார் ஆத்துல போற தண்ணிய அவன் அவன் அண்டால அள்ளுறான், நான் ஒரு சொம்புல்தானே அள்ளுனேன்' என்றார் அவர். இப்படி அவர் எனக்கு நெருக்கமானவர்.
மேலும் என்னுடைய மோசமான காலத்தில் உடன் இருந்தவர் பாபு விஜய். ’சர்கார்’ ரிலீஸ் ஆகி அந்த போஸ்டரை எல்லாம் கிழித்தார்கள். நானும், அவரும் காரில் உட்கார்ந்து கண்ணில் நீர் வழிய பார்த்தோம். இப்படி நெருக்கடியான காலத்தில் என்னோடு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் என்ன பேசுவது என பாபு விஜயை கேட்டபோது, அவர்தான் பழ கருப்பையா சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
இதுதான் அவருடைய திறமை. என்னிடம் இருந்து 12 உதவி இயக்குநர்கள், இயக்குநர் ஆகி இருக்கிறார்கள். இன்று பாபு விஜயின் நாள் என்பது மகிழ்ச்சி்" என்றார்.