ரஜினிகாந்தின் அடுத்தபடமான `தலைவர் 173' படத்தை சிபி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும், `ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இப்போது சில பேட்ச் ஒர்க் உடன் சேர்த்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது.
தன்னுடைய வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்ததாக நடிக்கும் `தலைவர் 173' படத்துக்கு தயாராகிவிட்டார் ரஜினிகாந்த். ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரஜினிகாந்த் தனது சென்னை இல்லத்திற்கு வெளியே ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ஏப்ரல் மாதம் இப்படம் துவங்குகிறது எனவும், அது கமர்ஷியல் என்டர்டெய்னிங் படமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தற்போது இந்தப் படத்தின் கதை எழுதும் பணிகள் எல்லாம் நிறைவடைந்து, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனம், சிபி சக்கரவர்த்தி படத்தின் ஸ்க்ரிப்ட் புக்கை ராஜ்கமல் மகேந்திரனிடம் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. இப்படம் பற்றி `வித் லவ்' பட விழாவில் பேசியபோது, "நான் 'தலைவர் 173' படம் பண்றேன்னு அறிவிச்சதும் பலர் வாழ்த்தினாங்க. சிலர் இவன் பண்றானானு பயந்தாங்க. தலைவர் ஃபேனா நான் சொல்றேன், இது ரசிகர்களும் குடும்பங்களும் தியேட்டர்விட்டு வெளிய வர்றப்போ திருப்தியோட வர்ற படமா இருக்கும். இது என் Promise!" என்றார்.
பின்னர் 'தாய் கிழவி' பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசியபோது, "ஏப்ரல் மாத மத்தியில் படப்பிடிப்பு துவங்கும்" என அறிவித்தார். இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் துவங்கியுள்ளது. இதற்கு அடுத்த படமாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் துவங்கவுள்ளது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.