தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். தற்போது இவர் இயக்குநராக களம் இறங்கி இயக்கியுள்ள படம் `மயிலா'. இம்மாத தொடக்கத்தில் இப்படம் ரோட்டர்டாமில் திரையிடப்பட்டது. தற்போது 2026ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC (Network for the Promotion of Asian Cinema) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான 'மயிலா'.
படைப்பாற்றல், பண்பாட்டு ஆழம் மற்றும் திரைப்படக் கலைச் சிறப்பைப் பிரதிபலிக்கும் சிறந்த ஆசிய திரைப்படங்களை NETPAC விருது கௌரவிக்கிறது. இந்தப் பரிந்துரை, 'மயிலா' திரைப்படத்தின் சர்வதேச திரைப்பட விழா பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். ’மயிலா’ திரைப்படத்தை திரைப்படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் வழங்குகிறார். இதனை ஆன்டோ சிட்டிலப்பள்ளி நிறுவிய நியூட்டன் சினிமா தயாரித்துள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் பி.மெலடி டோர்கஸ் நடித்துள்ளார். முக்கிய துணைவேடத்தில் வி.சுடர் கோடி நடித்துள்ளார்.
இயக்குநர் செம்மலர் அன்னம் கூறுகையில், “இந்த NETPAC பரிந்துரை எங்கள் முழுக் குழுவிற்கும் மிகவும் அர்த்தமுள்ள அங்கீகாரமாகும். ’மயிலா’ திரைப்படத்தை ஆழ்ந்த அக்கறையுடனும் நேர்மையுடனும் உருவாக்கினோம். IFFR போன்ற விழாவில் இப்படம் கவனிக்கப்படுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.
திரைப்படத்தை வழங்கிய பா.ரஞ்சித் கூறுகையில், “மயிலா சமூக வேரூன்றியதும் உணர்வுப்பூர்வமான நேர்மையையும் கொண்ட திரைப்படம். இத்தகைய குரல்கள் சர்வதேச மேடைகளை அடைவது முக்கியம். இந்தப் பரிந்துரை முற்றிலும் தகுதியானதே” என்றார்.
`மயிலா' வரும் மாதங்களில் மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு தனது பயணத்தைத் தொடரும் என்கிறது படக்குழு.