Samuthirakani Thadayam
கோலிவுட் செய்திகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி | Samuthirakani

ஒரு வாரம் கழித்து நேர்முகத்தேர்வு கடிதம் பற்றி தெரிந்த என் அப்பா, இனி என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டார். பல படங்கள் இயக்கியும், தேசிய விருதுகள் பெற்றும் என் அப்பா என்னிடம் பேசவில்லை.

Johnson

சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சீரிஸ் `தடயம்'. இந்த சீரிஸ் வெளியாகி வரவேற்பு பெற்றதையடுத்து அதன் தேங்க்ஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி "எல்லா மனதும் ஒரு வெற்றிக்காக தான் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வெற்றி மனதுக்குள் ஆழமாக சென்று பல விஷயங்களை சரி செய்துவிட்டது. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3,000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். அத்தனை எபிசோடிலும் வாலில் வெடி கட்டிய மாதிரி ஓடிக் கொண்டே இருப்போம். அப்போது வரை இது ஜெயித்துவிட்டது என சொல்லவே மாட்டார்கள். ஆனால், ஒருவன் இன்று சொல்லி இருக்கிறான். முழுக்க முழுக்க கௌஷிக் மேல் வைத்த நம்பிக்கை தான் இந்தப் படைப்பு.

Priyadarshan

இதை பற்றி கௌஷிக் 10 நிமிடங்கள் தான் சொன்னார். சரி தம்பி ஸ்க்ரிப்ட் அனுப்பிவிடுங்கள் என்று கூறினேன். இப்போது வரை அனுப்பவில்லை. ஆனால் ஒருமுறை நம்பிவிட்டால் அந்த நம்பிக்கையில் சென்றுவிட வேண்டும். ஒரு சமையல்காரன் தான் இருக்க வேண்டும், ஆளாளுக்கு உப்பை அள்ளிப் போட்டால் சமையல் நன்றாக இருக்காது. கண்ணை மூடி திறப்பதற்குள் கிடைக்கும் வெற்றி இறைவன் கொடுத்த சக்தி. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அப்பா படம் இயக்கும் சமயத்தில் பல ஆளுமைகளிடம் அவர்களின் அப்பா பற்றி பேச சொல்லி வீடியோ எடுத்தோம். ப்ரியதர்ஷன் சார் சொன்ன போது, `எனக்கு சிபிஐ பணிக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள கடிதம் வந்தது. அதே நாளில் பாசில் சாரிடம் உதவி இயக்குநராகா சேர அழைப்பு வந்தது. லெட்டரை மடித்து தலையணை அடியில் வைத்துவிட்டு பாசில் சாரிடம் சேர்ந்தேன். ஒரு வாரம் கழித்து நேர்முகத்தேர்வு கடிதம் பற்றி தெரிந்த என் அப்பா, இனி என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டார். பல படங்கள் இயக்கியும், தேசிய விருதுகள் பெற்றும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. கடைசியாக பத்ம ஸ்ரீ விருது வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்ற போது, சாரிடா நீ சரியான பாதையை தான் தேர்வு செய்திருக்கிறாய் என சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார். இது நடக்க 30 வருடம் ஆனது' எனக் கூறினார் ப்ரியதர்ஷன்.அது போல தகப்பன் ஒரு கனவில் இருக்கும் போது, அவரின் கனவை ஈடு செய்யும் வாய்ப்பு அமைவது பெரிய விஷயம்" என்றார்.