Priyanka, Indraja Robo Shankar
கோலிவுட் செய்திகள்

"அவர ஸ்க்ரீன்ல பார்க்கும் போது..." - ரோபோ சங்கரின் கடைசி படத்தை பார்த்து நெகிழ்ந்த குடும்பத்தினர்

கடந்த ஒன்பது மாதங்களாக அவருடைய குரலையும், உருவத்தையும் மிஸ் செய்திருந்தோம். திரையில் அவரை பார்க்கும் போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

Johnson

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு பின் வெளியாகும் கடைசி படம் ‘ஈகோ ராமன்’ சிறப்பு காட்சியை அவரது குடும்பம் பார்த்தது. க்ளைமாக்ஸ் காட்சிகளை முன்பே காட்டியிருந்தார் என மகள் இந்திரஜா நினைவுகூர, திரையில் அவரை மீண்டும் காணும் அனுபவம் குடும்பத்தினருக்கு உணர்ச்சிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் ரோபோ சங்கர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ள படம் `ஈகோ ராமன்'. இப்படம் மே 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துள்ளனர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர்.

நடிகர் ரோபோ சங்கர் மரணம்

படம் பார்த்த பின்னர் பேசிய ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா "இந்தப் படம் பற்றி எங்களிடம் அவர் சொல்லி இருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளை என்னிடம் காட்டியும் இருக்கிறார். அவ்வளவு ரசித்து அவர் செய்த படம் இது. என்னுடைய ஜானர் இல்லாமல் புதிதாக ஒன்றை செய்திருக்கிறேன் என இந்தப் படம் பற்றி சொன்னார் அப்பா. அவர் நம்மை விட்டு தூரமாக சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் படத்தில் அவரை பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. படத்தில் தான் அவர் ஈகோ பார்க்கும் கேரக்டர். ஆனால் நிஜத்தில் எல்லோரையும் மகிழ்விக்கும் நபர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்." என்றார்.

ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா பேசிய போது "ஈகோ ராமன் படக்குழுவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஒன்பது மாதங்களாக அவருடைய குரலையும், உருவத்தையும் மிஸ் செய்திருந்தோம். திரையில் அவரை பார்க்கும் போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஒரு நடிகருக்கான அங்கீகாரம், திரையில் தனியாக இருக்க வேண்டும். அதுதான் திரைத்துறையில் சாதித்தற்கான அங்கீகாரம் என அவர் சொல்வார். அந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஈகோ ராமன் என்ற பெயருக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு நபர் ரோபோ சங்கர். அவர் எந்த இடத்திலும் ஈகோ பார்த்தது கிடையாது. அதற்கு நேர்மாறான பாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். அவரின் கடைசி மூன்று நாட்களில் அவர் உறங்கியதை மட்டும் தான் பார்த்தோம். இப்போது அவரின் கண் அத்தனை உணர்ச்சிகளை காட்டி நடித்திருப்பதை படத்தின் கடைசி 15 நிமிடத்தில் பார்த்து மகிழ்ந்தோம். அதற்காக இந்த ஈகோ ராமன் படக்குழுவுக்கு நன்றி " என்றார்.