rajinikanth mari selvaraj
rajinikanth mari selvaraj pt desk
கோலிவுட் செய்திகள்

“மாமன்னன் அருமையான படைப்பு” - நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! நன்றி சொன்ன மாரி செல்வராஜ்!

webteam

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரிலீஸான நாள்முதலே, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை குவித்துவருகிறது மாமன்னன். வசூல் ரீதியாகவும் படம் வெற்றிருப்பதாக கூறி, இயக்குநர் மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்திருந்தது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட்ஸ்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடந்த சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

rajinikanth

நடிகர் ரஜினிக்காக, நேற்று (ஜூலை 4) சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் படம் தனியாக திரையிடல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து படம் குறித்த தனது எண்ணங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர், 'மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

rajinikanth mari selvaraj

அதற்கு பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், 'எனது முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.