நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சித்தார்த் ரெட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீனில் உள்ள சித்தார்த், நான்கு வாரங்களில் காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
`ராயுடு' என்ற தெலுங்குப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரதியுஷா. தமிழில் முரளி நடிப்பில் தம்பிராமையா இயக்கத்தில் உருவான `மனுநீதி' படம் மூலம் அறிமுகமானவர், பிரபுவுடன் `சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் `தவசி', சத்யராஜுடன் `சவுண்டு பார்ட்டி', ராமராஜனுடன் `பொன்னான நேரம்', பாரதிராஜாவின் `கடல்பூக்கள்' ஆகிய படங்களில் நடித்தார். 18 வயதில் நடிக்க வந்தவர் சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரப்பான நடிகையானார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் 21 வயதிலேயே மரணமடைந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
அவர் மரணத்தை விட, அவரின் மரணத்தில் இருந்த மர்மம் தந்த அதிர்ச்சி பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. நடிகை பிரதியுஷாவும், சித்தார்த் ரெட்டியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், சித்தார்த் வீட்டில் இவர்களது காதலுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே 2002 பிப்ரவரி 22ம் தேதி பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதியுஷா உயிரிழந்தார்.
பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனவும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தில் பிரதியுஷாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, சித்தார்த் ரெட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில், கடந்த 2004-ம் ஆண்டில் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதராபாத் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார் 2011-ம் ஆண்டு மேல்முறையீடு செய்ய, அவரின் தண்டனையை உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளாகக் குறைத்ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது. ஆனாலும் தன் தண்டனை காலத்தை குறைக்க கோரி சித்தார்த் மீண்டும் மேல்முறையீடு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய், 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். 14 ஆண்டு விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதியுஷா கழுத்து நெடுக்கப்பட்டதாகவோ, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ ஆதாரங்கள் இல்லை. இது விஷம் குடித்ததால் ஏற்பட்ட மரணம் என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அவரது தாய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதே நேரத்தில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்தார்த் ரெட்டியே குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது. எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஜாமீனில் உள்ள சித்தார்த் ரெட்டி இன்னும் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடிகை பிரதியுஷா இறந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.