இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான `டூயட்' படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, "கன்னட சினிமாவில் வருமானத்துக்காக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பாலசந்தரை நான் முதலில் சந்தித்த போது நாடகம் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசியது அவருக்கு பிடித்திருந்தது. ஏன் நீ இவ்வளவு நாள் என்னை வந்து சந்திக்கவில்லை எனக் கேட்டார். பின்னர் அவரது படத்தில் என்னை அறிமுகம் செய்தார். அப்போது அவர் படத்தில் ஒருவர் அறிமுகம் என்றால் பெரிய விஷயம். பின்னர் மணிரத்னத்தின் இருவர் படம் அமைந்தது. என் பயணம் துவங்கியது.
பாலச்சந்தரின் `பொய்' படத்தை நான் தயாரித்தேன். அது அவரது 100வது படம். அவர் 99 படங்கள் இயக்கி முடித்த பின், எனக்கு போன் செய்து ஒரு சீரியலில் நடிப்பதற்காக அழைத்தார். நீங்கள் ஏன் படம் இயங்குவதில்லை எனக் கேட்டேன். `என் படத்தை யார் தயாரிப்பார்?' எனக் கேட்டார். நான் தயாரிக்கிறேன் உங்களுக்கு என்ன எடுக்க வேண்டுமோ எடுங்கள் என்றேன்.
அந்தப் படத்தை தயாரித்தேன், படம் வெற்றி பெறவில்லை. பாலச்சந்தர் மிகவும் வருத்தப்பட்டார். `உன்னை நான் அறிமுகப்படுத்தினேன். இப்போது என்னால் நஷ்டம் அடைந்துவிட்டாய்' என்றார். சார் நான் சென்னைக்கு 120 ரூபாய் பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்தேன். இந்தப் படத்தால் மூன்றரை கோடி ரூபாய் இழந்திருக்கிறேன். ஆனால் நான் தெருவுக்கு போகவில்லை.
ஏனென்றால் நீங்கள் என்னை நஷ்டத்தை தாங்கும் அளவுக்கு பணக்காரனாக்கி இருக்கிறீர்கள். உங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும் என்றால், அந்தப் படத்தால் நான் சம்பாதித்த லாபம் அதுதான் என்றேன். உடனே என்னை கட்டியணைத்து நன்றி என சொன்னார். நான் தயாரித்த அவரது படம் ஃபிளாப் ஆனது என் துரதிர்ஷ்டம், அவர் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது கடைசி மூச்சுவரை அவரோடு எனக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருந்தது. அவரால் எனக்கு கிடைத்ததுதான் ஏராளம்." என்றார்.