மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் அமீர், "மிஷ்கின் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர் கிடையாது. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டவர்தான் அவர். தன்னைப் பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்வதிலும் சரி, படம் எடுப்பதிலும் சரி தனக்கென்று ஒரு பாணியை வைத்திருப்பார். விமர்சனங்கள் வைக்கும்போது நான் இப்படித்தான் என்று அதை எதிர்கொள்வதில் மிஷ்கினுக்கு முதன்மை இடம் உண்டு.
பாரதிராஜா சார் படம், பாக்யராஜ் சார் படம், பாலசந்தர் சார் படம் பார்த்து வளர்ந்திருப்போம். அவர்களில் இருந்து விலகி ஒரு ஸ்டைலை உருவாக்குவார். அது என்ன ஜானர் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றாக இருக்கும். என்னைக் கூட்டி சென்று ’யுத்தம் செய்’ படத்தில் ஆட வைத்தார். ஏன் அது நடந்தது என இன்னும் எனக்குப் புரியவில்லை. அதிலிருந்து வெளியே வரவே காலம் ஆனது.
நடிப்பிலலும்கூட மிஷ்கின் இப்படி நடிப்பாரா என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி படங்களில் ரசிகர்களின் கண் அவர்களை மட்டும்தான் பார்க்கும். அதே மாதிரிதான் விஜய் படங்களும். ஆனால் விஜய் படத்திலேயே அருகில் இருப்பவர்களைப் பார்க்கவைத்தது இரண்டே பேர்தான்.
ஒருவர் விஜய் சேதுபதி, மற்றொருவர் மிஷ்கின். ’மாஸ்டர்’ படத்தில் விஜய் சாரைத் தாண்டி, விஜய் சேதுபதி சாரை ரசிப்போம். அதேபோல ’லியோ’ படத்தில் மிஷ்கினை ரசித்திருப்போம். இசையிலும் மிஷ்கின் சிறப்பாகப் பணியாற்றுவார். எனக்கு தெரிந்து டி.ஆர்.சாருக்குப் பிறகு மிஷ்கின்தான் என்று நினைக்கிறேன்" என்றார்.