தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன். தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதர்வாவின் `இதயம் முரளி' படம் மூலம் மீண்டும் நடிகராகவும் வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா பயணம் பற்றி பல விஷயங்களைப் பேசி இருந்தார். அதில் பிற இசையமைப்பாளர்களுடனான நட்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன தமன், "நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கிறோம். அதில் பல விஷயங்களை உரையாடுவோம். எல்லாமே வெளிப்படையாக பேசுவோம்.
இந்தப் போட்டி, சண்டைகள் எல்லாம் வெளியேதானே தவிர, எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது நான் இசையமைக்கும் ’Itllu Arjuna’ என்ற படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். அது விரைவில் வெளியாகவுள்ளது. டிஎஸ்பியும் நானும் தினமும் பேசிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம். வெளியே நம்மைப்பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என நாங்களே ஆச்சர்யம்தான் படுவோம். போட்டி என்பது போட்டிதான். உங்கள் காலில்தான் நீங்கள் நடந்தாக வேண்டும். ஆனால், இங்கு யாருடனும் சண்டையே பிரச்னையோ இல்லை.
இருவரது பாடலும் ஒரேநாளில் வெளியாகிறதா, யார் நல்ல பாடல் கொடுக்கிறோம் என்பதில் போட்டி இருக்கும். இது ஓர் ஆட்டம் போலதான், யாரோ ஒருவர்தானே ஜெயிக்க முடியும். இதுவும் அப்படித்தான். அதேநேரம், ஒருவர் நன்றாக பாடல் கொடுக்கும் போது வாழ்த்துவோம். அப்படி வாழ்த்தவில்லை என்றால், நாம் வளர முடியாதே.
என்னுடைய OG பாடல்கள் வந்தபோது பலரும் என்னைப் பாராட்டினார்கள். அனிருத் எல்லாம் நிறைய புகழ்ந்தார். நானும் அவரும் கிரிக்கெட் இணைந்து விளையாடுவோம். அவ்வளவு க்ளோஸ்" என்றார்.