"மனதில் பட்டதை பேசினேன், குற்றமாக நினைக்கவில்லை" - வைரல் வீடியோ பற்றி சமுத்திரக்கனி | Samuthirakani
இந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சமுத்திரக்கனி. சமீபத்தில் "ஒரு விஷயம் நடந்த பின்னாலயும் வெளிய கூட்டிட்டு வருவானா என்ன விளையாட்டா, நாலு சுவத்துக்குள்ள வெச்சுக்கய்யா. யாரை பழிவாங்குறதுக்கு? அதுக்கு இந்த போஸ்? நல்லா இருந்துச்சு, இப்போ கட்சிக்காரனே சொல்றான் இதுக்கு மேல எதுவும் நடக்காதுனு" என சமுத்திரக்கனி பேசிய ஒரு வீடியோ வைரலானது. தற்போது இவர் கௌதம் மேனனுடன் இணைந்து நடித்துள்ள `கார்மேனி செல்வம்' ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்கு பேட்டி அளித்த சமுத்திரக்கனியிடம் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ வைரலானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன சமுத்திரக்கனி "அந்த வீடியோ எடுக்கிறார்கள் என எனக்கு முன்பே தெரியும். முன்னுரையை அந்த தம்பி எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான் சரி எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். அவன் எடுக்கிறான் என்பதற்காக எல்லோரிடமும் சொல்லி பேச்சை நிறுத்த முடியாதே. சரி பேசி முடிப்போம் எடுக்கட்டும், அதில் அவனுக்கு ஒரு சந்தோசம். இனி சாப்பிட மட்டும் தான் வாயை திறக்க வேண்டும் போல. நான் அக்கறையோடு பேசும் விஷயம் தான். எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது. சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த தளங்களுக்கு சென்றுவிடுவேன்.
நீங்கள் சொன்ன அந்த வீடியோ வெளியானதும், என் தம்பி ஒருவன் போன் செய்து அண்ணே இப்படி வந்திருக்கே என்றான். அது எனக்கு தெரிந்து எடுத்த வீடியோ தான் என்றேன். அது வந்துவிட்டது, அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக எல்லாம் நினைக்கவில்லை. பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை. அது என்னுடைய அக்கறை, வலி, வேதனை. என் மனதிற்கு பட்டதை பேசினேன்." என்றார்.

