காதலில் விழுந்து கடனாளியாகும் இளைஞனின் கதையே `லவ் ஓ லவ்'
காதல் பிரச்னை ஒன்றினால் காவல் நிலையத்துக்கு அழைத்து வயப்படுகிறார் ரகுவரன் (பவிஷ்). மாதர் சங்கத்தினர் ரகு, அவந்திகா (நாக துர்கா) என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட, விசாரணையை துவங்குகிறார் காவலர் ஹரிச்சந்திரன் (செல்வராகவன்). நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ரகுவரன். அப்பா, அம்மா, தங்கை என குடும்பமே ரகு சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்த சூழலில் அவந்திகா (நாக துர்கா) ரகு வாழ்க்கையில் நுழைய, காதலியின் ஆடம்பர செலவுகளுக்காக கடன் மேல் கடன் வாங்கி காலியாகிறார். ஒரு கட்டத்தில் இந்தக் காதல் வேண்டாம் என ரகு முடிவெடுக்க, தன்னை விட்டு போக கூடாது என கேட்கிறார் அவந்திகா. அப்போது ரகு ஒரு கண்டிஷன் போடுகிறார். அது என்ன? அதன் பின் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
ஜாலியான படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். படத்தின் ஒரு சில சூழலும், சில காமெடிகளும் சிரிக்க வைக்கிறது.
லீட் ரோலில் நடித்துள்ள பவிஷ் காமெடி காட்சிகளில் கலகலப்பாக சமாளிக்கிறார். சீரியஸ் காட்சிகளில் நடிக்க முயற்சிக்கிறார். ஆனாலும் இன்னும் தனுஷ் ஹேங் ஓவர் போகவில்லை என்பது பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது. அடுத்தடுத்த படங்களில் தனக்கான தனித்துவத்தை உருவாக்குவார் என நம்புவோம். நாக துர்கா இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். காவலதிகாரியாக வரும் செல்வராகவன் தன் வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். சில இடங்களில் காமெடிக்கு உதவுகிறார். கே எஸ் ரவிக்குமார் இயல்பான தந்தையாக மனதில் நிற்கிறார்.
பி ஜி முத்தையா முடிந்த அளவு இப்படத்தை இயல்பான படமாக காட்ட முயற்சித்திருக்கிறார். Foxn இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், பலமுறை பார்த்து சலித்த ஒரு கதையை இளம் நடிகர்களை கொண்டு சொல்லி இருக்கிறார்கள். இத்தனைக்கும் இதே கதையை பத்து ஆண்டுகளுக்கு முன்பு `ரோமியோ ஜூலியட்' என பார்த்தோம். மீண்டும் அதே கதை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சொல்லப்படுவது தான் சிக்கல். மேலும் காதலி கேட்கிறார் என்பதற்காக செலவு செய்கிறார்கள் அதுதான் இந்த தலைமுறையின் சிக்கல் என சொல்வதிலும், அதை பொதுமைப்படுத்துவதிலும் சுத்தமாக லாஜிக் இல்லை. லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்யும் அளவுக்கு அந்த பெண் எதற்காக அவருக்கு அவ்வளவு முக்கியம் என்ற அழுத்தமான காரணமும் படத்தில் இல்லை.
இதில் பெண் உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை கேலி செய்வது, பொண்ணுங்கனாலே இப்படித்தான் என்ற ஜோக் இவை எல்லாம் ஏற்புடையதாக இல்லை. `ஆணும் பெண்ணும் சமம்னு ஒரு ஆண் சொல்றதே ஆணாதிக்கம் தான்' என்ற வசனம் எல்லாம் என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்பதும் புரியவில்லை.
மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக முடிகிறது. கதையில் புதுமையும், சுவாரஸ்யமும் சேர்த்திருந்தால் பார்வையாளர்களை கவர்ந்திருக்கும் இந்த லவ் ஓ லவ்.