Kamalhaasan - CM Vijay Pt web
கோலிவுட் செய்திகள்

அரசு ஓடிடி, வரி ரத்து, 5 காட்சிகள்... முதல்வர் விஜயிடம் கமல் வைத்த 6 கோரிக்கைகள்! | CM Vijay | Kamal

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Johnson

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பலரும் அவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்பதும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் நிகழ்ந்து வருகிறது. அந்த சூழலில் இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முதலமைச்சர் விஜயை சந்தித்து தமிழ் சினிமா நலனுக்காக 6 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அந்த கோரிக்கையில் "நம் தமிழ் திரையுலகம் உங்கள் தலைமை மற்றும் ஆட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் விசுவாசமான ரசிகர்கள். திரையுலகம் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பாக நான் பின்வரும் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கிறேன். பின்வருவனவற்றைக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

1. தமிழக அரசின் ஓடிடி தளம் தொடக்கம்:
தமிழ் பார்வையாளர்கள் தமிழ் சினிமா, சுயாதீனத் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மலிவான மற்றும் மானிய விலையில் அணுகக்கூடிய வகையில், ஒரு அரசுக்குச் சொந்தமான ஓடிடி தளத்தைத் தொடங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

2. உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்தல்:
அதிகரித்து வரும் தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையரங்கு இயக்கச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, 4% ஆக விதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வரிச் சலுகை தமிழ் திரையுலகிற்கு பெரிதும் உதவும்.

3. ஒரு வலுவான Anti-Piracy Team அமைத்தல்:
Piracy என்பது ஆயிரக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தயாரிப்பாளர்களின் கடின உழைப்பையும் முதலீட்டையும் அழிக்கிறது. தமிழ் சினிமாவைப் பாதுகாப்பதற்காகவும், Piracy உள்ளடக்கங்களை நிகழ்நேரத்தில் (real time) அகற்றும் அதிகாரங்களைக் கொண்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இணையக் குற்றப் பிரிவின் கீழ் ஒரு பிரத்யேக anti-piracy அமலாக்கக் குழுவை உருவாக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

4. ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கான அனுமதி:
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது திரையரங்குகளின் வருவாயை மேம்படுத்துவதோடு, திரைப்படக் காட்சித் துறையின் மீட்சிக்கும் துணைபுரியும்.

5. ஓடிடிக்கு 8 வார கால இடைவெளி:
திரையரங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் 8 வார OTT வெளியீட்டுக் காலத்தை அரசு ஒழுங்குபடுத்தி, கட்டாயமாக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இது திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

6. திரைப்படத் தயாரிப்பு ஊக்கத் திட்டம்:
தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான படப்பிடிப்பை நிறைவு செய்யும் இந்தியத் திரைப்படங்களுக்கு, அப்படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம் வரை தயாரிப்பு ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்துமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இது, தமிழகத்தை இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு மையமாக மீண்டும் நிலைநிறுத்துவதோடு, மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

சினிமா நமது மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தின் ஒரு அங்கமாகவும், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. உங்கள் ஆதரவுடன், தமிழ்நாடு மீண்டும் இந்திய சினிமாவை வழிநடத்த முடியும். தமிழ் சினிமாவை இந்தியா முழுவதிலும் உலகெங்கும் கொண்டு செல்வதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு உண்மையான சினிமா காதலராகிய நீங்கள் நமது சினிமாத் துறையில் இருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் கோரிக்கைகள் உங்கள் நேர்மறையான பரிசீலனைக்கு உட்படும் என நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.