சசிகுமார், சைத்ரா நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் `மை லார்ட்'. இப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வருகிறது படக்குழு. அப்படியான ஒரு பேட்டியில் கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய `ஜப்பான்' படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ராஜூ முருகன்.
அவர் இதுகுறித்து சொன்னபோது, "எல்லாம் நாம் நம்பித்தான் செய்கிறோம். நாம், தயாரிப்பாளர், நடிகர் என அனைவரையும் நம்புகிறோம். அதைச் செய்யும்போது ஏதோ ஒன்று தவறி விடுகிறது. ஏனென்றால், `ஜப்பான்' கதை எட்டு எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸுக்காக எழுதப்பட்டது. அது நிறைய பாத்திரங்கள் கொண்ட ஒரு ஹைப்பர் லிங்க் கதையாக இருந்தது. அந்தக் கதையை தயாரிப்பாளர் பிரகாஷ் சார் படித்த பின்பு, ’இதனை படமாக எடுக்கலாமே’ என்று கேட்டார். ஒரு படத்துக்கான கதையாக மாற்றப்பட்டபோது நான் நினைத்த மாதிரி, எடுக்க முடியவில்லை. ஜப்பானில் நடந்தது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான். அதை யார் மேலும் சுமத்த விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறுவேன், கார்த்தி சார் அந்தப் படத்தில் என்னுடன் கடைசிவரை துணை நின்றார். அந்தப் படத்தின் சில பரிசோதனை முயற்சிகளில் அவர் நடிக்க சம்மதித்தார். அந்த தயாரிப்பு நிறுவனமும் நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தனர். ஆனால், எனக்கு பயம் இருந்தது. கார்த்தி சார் போன்ற பெரிய நடிகர் வரும்போது அவருக்கான விஷயங்கள் செய்ய வேண்டும் என நான் நினைத்தேன்.
இங்கு ஒரு வியாபார அமைப்பு இருக்கிறது, வியாபார ரீதியில் படத்தை நிறுத்தினால் மட்டும்தான் உரிய மரியாதையும், அடுத்த வாய்ப்பும் கிடைக்கும். இப்போது நான் புரிந்துகொண்டது, கதை என்ன கேட்கிறதோ, அதை மட்டும் பண்ண வேண்டும்" எனக் கூறியுள்ளார் ராஜூ முருகன்.