சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சூர்யா "கருப்பசாமி தான் இந்தப் படம் இவ்வளவு தூரம் வரக் காரணம் என நினைக்கிறேன். ஒரு மனிதனுக்குள் கடவுள் வந்தால் என்ன நடக்கும் என்பதை நான் உணர்கிறேன்.
நம்பிக்கை இருக்கும் இடத்தில் அதிசயம் கண்டிப்பாக நிகழும். இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை கருப்புசாமிதான் ஹீரோ. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து நடிக்க வெச்சதுக்கு நான் என் இயக்குநர் RJB-க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். RJB பல திறமைகள் கொண்டவர். நான் என்னை வெறும் சூர்யாவாக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் RJB அவரை இயக்குநராக, நடிகராக, வர்ணனையாளராக என பல பரிமாணங்களில் பார்க்கிறார். ட்ரீம் வாரியர் எனக்காக என்னைவிட அதிகம் சிந்திப்பவர்கள். அவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை இருக்கிறது. அவர்களால் இப்படி ஒரு உலகத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.
படத்தின் முதல் பாதி ரொம்பவும் எமோஷனலாக இருக்கிறது, இரண்டாம் பாதியில் தியேட்டர் மொமண்ட்ஸ் அதிகமாக இருக்கிறது என சொல்கிறார்கள். மே 14 உங்கள் கையில்தான் இருக்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் தியேட்டரில் சந்திப்போம். மதுரை சித்திரை திருவிழாவின் போதே 5 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். அது போல இந்த கருப்பு திருவிழாவை இன்னொரு சித்திரை திருவிழாவாக பார்க்கிறேன்" என்றார்.