வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் 'அரசன்'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் துவங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு சிம்பு - ஐசரி கணேஷ் இடையேயான பணப் பிரச்னை காரணமாக இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் பிரச்னை சுமுகமாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது.
தற்போது ’அரசன்’ படப்பிடிப்பு துவங்கும் வரை `ராஜன் வகையறா' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ’அரசன்’ படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை என்றாலும் படத்தைப் பற்றிய புது அப்டேட் கொடுத்துள்ளார் யோகிபாபு. சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசியவர் ’அரசன்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "அது (அரசன்) வடசென்னைக்குள் வருகிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால், நான் அதற்குள் போய்விட்டேன். சிம்பு சார் சூப்பர். எங்க காம்போ ப்ளாஸ்ட் ஆக இருக்கும். எனக்கு படம் முழுக்க வரக்கூடிய ஒரு கதாபாத்திரம்" எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.