Ilaiyaraaja Ilaiyaraaja
கோலிவுட் செய்திகள்

இசைக்கு வயது 83.. இளையராஜாவை போற்ற வைக்கும் 2 ஆகச்சிறந்த விசயங்கள்! #HBDIlaiyaraaja

இதுபோதும் என எப்போதும் நிறுத்தாமல் தொடர்ந்து இயங்குவது. 83 வயதில் ஒருவர் எப்படி இத்தனை ஆற்றலுடன், கற்பனை வளத்துடன் இயங்குகிறார் என்பது நாம் கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டியது.

Johnson

இசைஞானி இளையராஜா 83 வயதிலும் தன்னை ஒரு கருவி மட்டுமே எனக் கருதி, ‘இசை என் மூலமாக வருகிறது, ஆனால் என்னுடையது அல்ல’ என்ற தத்துவத்துடன் தாழ்மையாக வாழ்கிறார். 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தும் கர்வமின்றி, துவக்க கால இளைஞனின் மனநிலையோடு தொடர்ந்து தேடிக்கொண்டே இருப்பது அவரை தனித்துவமான கலைஞனாக மாற்றுகிறது.

இசைஞானி இளையராஜா பிறந்தநாள் இன்று. அவரை பற்றி ஒருவர் பாராட்டுவது என்பது புதிது இல்லை, கூடவே அவரை பற்றி ஆச்சர்யப்படாமல் இருக்கவும் முடியாது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ராஜா குறித்தான பல மதிப்பீடுகள் இங்கு பேசப்பட்டுள்ளது, இன்னும் கூட அது பேசப்படும் தான். ராஜா குறித்த அதிகம் பேசப்படாத இரு விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ilaiyaraaja

இளையராஜா என்றாலே அவர் இசையில் நிகழ்த்திய சாதனைகளை பேசி பேசி மாளாது. ஆனால் அதை பேசிய அதே அளவு, தன்னிடம் இருந்து வரும் இசை எப்படி உருவாகிறது என்பது பற்றிய அவரின் தத்துவார்த்த தேடலும் பேசப்பட வேண்டியது. அவருடைய இசைக்காக அவர் பாராட்டப்படும் போது எல்லாம் அவர் சொல்வது ஒன்றே ஒன்று தான். இது என் மூலமாக வரக்கூடியது, ஆனால் என்னுடையது அல்ல. இந்த தெளிவு தான் அவரின் இத்தனை ஆண்டு கால அனுபவத்தின் பாடம். திறமையாளர்களுக்கு எப்போதும் ஒரு கர்வம் இருக்கும் என்பது பொதுவான பேச்சு. ஆனால் அந்த கர்வத்திலிருந்து விலகி, தன் திறமை குறித்து தனக்குள்ளேயே ஒரு விவாதம் நடத்துவதும், அதை பல இடங்களில் அவர் பதிவு செய்ததும் கவனிக்க வேண்டியது.

சமீபத்தில் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜா. அங்கும் கூட உங்களுக்கு தான் இது 50 வருஷம் எனக்கு நான் துவக்க காலத்தில் எப்படி வந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன் என்று மிக அன்போடு தெரிவித்தார். அந்த நல் மனம் தான் ராஜா.

இந்த ஞானத்துக்கு அடுத்ததாக அவரை பார்த்து நாம் வியக்க வேண்டியது, இதுபோதும் என எப்போதும் நிறுத்தாமல் தொடர்ந்து இயங்குவது. 83 வயதில் ஒருவர் எப்படி இத்தனை ஆற்றலுடன், கற்பனை வளத்துடன் இயங்குகிறார் என்பது நாம் கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டியது. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். இன்னும் இசை மீது துளியும் ஆர்வம் அவருக்கு விலகவில்லை. சினிமா ஒரு பக்கம் என்றால் சிம்பொனி மறுபக்கம் என இப்போது புதிய ஒரு முயற்சியை கையில் எடுக்கிறார். சினிமாவில் இயங்குவது என்ற ஒரு கம்ஃபர்ட்ஸோனிலிருந்து மாறி இசையின் வேறு சாத்தியங்கள் என்ன என்பதை நோக்கி செல்கிறார்.

இளையராஜா

இது போன்ற ஒரு கலைதாகம் தான் இளையராஜாவை ஒரு இளைஞனாகவே வைத்திருக்கிறது போல. அவரின் இயக்கம் இப்படி என்றால், அவரையும் சினிமா விடுவதாக இல்லை. மிஷ்கின் பல இடங்களில் சொல்வது மாதிரி, ஒரு இயக்குநர் ஒருமுறையாவது இளையராஜாவுடன் பணியாற்றிவிட வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. அதனால் தான் அடுத்தடுத்து அவரின் இசைக்காக பல இயக்குநர்கள் வரிசை கட்டுகிறார்கள். மே 30ம் தேதி தனது முதல் சிம்பொனி Valiant-ஐ சென்னையில் இசைத்தார். இதனை தொடர்ந்து இன்னும் சில நகரங்களிலும் இந்த கட்சேரியை நடத்த இருக்கிறார்.

சினிமா என எடுத்துக் கொண்டால் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் `பாக்கெட் நாவல்', கார்த்திக் சுப்பாராஜின் புதிய படம், இன்று மாரி செல்வராஜின் `மஞ்சணத்தி' படத்தில் இளையராஜா அறிவிப்பு, இது போக இயக்குநர் பால்கி இயக்கத்தில் உருவாகும் தமிழ்ப்படத்துக்கும் இளையராஜா தான் இசை. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் எல்லாம் ராஜா கையில். எனவே எதிரே அனிருத், சாய் என எத்தனை தலைமுறை வந்தாலும், போட்டிக்கு நிற்கும் அந்த ஒருவராக இளையராஜாவே இருப்பார். இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் ராஜா தான். அவர் இன்னும் பல ஆண்டுகள் இசையால் நம்மை மகிழ்விக்க வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.