மணிகண்டன், அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரிஷா, வடிவேல் முருகன், பார்வதி, சிங்கம்புலி, முத்துக்குமார் எனப் பலரும் நடித்துள்ள சீரிஸ் `முத்து என்கிற காட்டான்'. இந்த சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இரவு இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி, "மணிகண்டனுக்கு எனக்குமான நட்பு எதேச்சையாக ஆரம்பித்தது. வினோத் மேனன் என்ற ஒரு நபர் மூலமாக அவர் குறும்படத்தில் நடிக்க போட்டோ கொடுத்து ஆரம்பித்தது. அது இவ்வளவு தூரம் வந்து சேர்ந்திருக்கிறது. அவருடைய அறிவு மிக ஆச்சர்யமானது. அவரது, எழுத்து மிக ஆழமாக இருக்கும். 2008லிருந்து அவரைத் தெரியும், அவர் எழுதுவது எல்லாமே இப்போதுவரை சுவாரஸ்யமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அற்புதமான படங்களையும், பாடங்களையும் கொடுத்ததற்கு நன்றி மணி.
இதில் சிட்டுப் பாத்திரத்தில் நடித்த அபி, தர்மதுரையில் நடித்தார். அவர், இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டாலும் எனக்கு இன்னும் அவள் குழந்தைதான். பாருவைப் பற்றிப் பேச எனக்கு ஒன்றும் இல்லை. எனக்கும் அவருக்கும் ஆகாது. அதனால் அவரிடம் நான் எதுவும் பேசுவதாய் இல்லை. பாருவிடம் வாராவாரம் பேசி நான் டயர்ட் ஆகிவிட்டேன். ஆனால், உங்களுக்கு பாரு மீது வருத்தம் இருக்கலாம், இந்த வெப்சீரில் பார்த்த பின்னர் அது மறைந்துவிடும்.
கோடாங்கி, எனக்கு இந்த ஆளை விமர்சனம் செய்வது பிடிக்கும். என்னுடைய படத்தையும் கலாய்த்திருக்கிறார். ஆனாலும் அதை மிக சுவாரஸ்யமாகச் செய்வார். நடிக்க ஆரம்பித்த பிறகு நிறுத்திவிட்டார்.
இனிமேல் அவரை யாராவது செய்தால்தான் உண்டு. இந்த வெப்சீரிஸ் பார்க்கும்போது உங்கள் அனைவருக்கும் தெரியும், இவரை ஸ்க்ரீனில் பார்க்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸ் நாங்கள் பார்த்துவிட்டோம், உங்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.