Bhavana Anomie
கோலிவுட் செய்திகள்

"பிடித்த கதைக்காக ஒரு வருடம் கூட காத்திருப்பேன்!" - பாவனா | Bhavana | Anomie

நல்ல படமாக இருந்தால் ஹீரோ படமா, ஹீரோயின் படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை, மக்கள் நல்ல படங்களை ஆதரிப்பார்கள்.

Johnson

பாவனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'அனோமி' படம் தமிழில் மார்ச் 6 அன்று வெளியாகிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் பாவனா, 'நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயார். ஹீரோ, ஹீரோயின் என்ற பார்வை மாறி, கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது' என்றார். மேலும், 'பிடித்த கதைக்காக ஒரு வருடம் காத்திருப்பேன்' எனத் தெரிவித்தார்.

பாவனா நடிப்பில் கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான படம் `அனோமி'. இப்படத்தின் தமிழ் வெர்ஷன் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. படம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாவனா "அனாமி கேரளாவில் நன்றாக ஓடுகிறது, மார்ச் 6 தமிழில் வெளியிடுகிறோம். ஒரு நல்ல இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படம் செய்திருக்கிறோம். படம் பார்த்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்" என்றார்.

தமிழ் சினிமாவில் நீங்கள் நடிப்பதை நிறுத்திக் கொண்டீர்களே, திரும்ப நடிக்கும் எண்ணம் இல்லையா என்றதும் "அதற்கு தனியாக காரணம் எதுவும் கிடையாது. நல்ல படங்கள் வந்தால் கண்டிப்பாக நடிக்க தான் போகிறேன். அந்த சமயத்தில் மலையாளம், கன்னட மொழிகளில் நான் பிஸியாகிவிட்டேன். வேண்டுமென்றே எடுத்த இடைவேளை இல்லை இது." என்றார்.

ஹீரோ படங்களில் ஒரு ஹீரோயினாக இருப்பதில் இருந்து இந்த மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இப்போது ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்ற கான்செப்டே முடிந்துவிட்டது. இதுவும் ஹீரோயின் மையப்படுத்திய படம் இல்லை. அந்தக் கதையில் நாங்கள் எல்லோரும் கதாபாத்திரங்கள் அவ்வளவு தான். மேலும் நல்ல படமாக இருந்தால் ஹீரோ படமா, ஹீரோயின் படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை, மக்கள் நல்ல படங்களை ஆதரிப்பார்கள்." என்றார்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான கருத்தை மையப்படுத்திய கதைகள் உங்களிடம் வருகிறதா? அது மாதிரி படங்கள் நடிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டதும் "அது போன்ற கதைகள் நிறைய வருகின்றன. அதே சமயம் கண் மூடித்தனமாக, தொடர்ந்து அப்படியான படங்களில் நடிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை. நல்ல கதாபாத்திரங்கள், நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்." என்றார்

இது உங்களில் செகண்ட் இன்னிங்க்ஸ் என எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கப்பட "அப்படி எதுவும் இல்லை. நான் ஒரு நடிகை, நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன். இந்தப் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பேன் எனவோ, இது என் கம்பேக் அப்படி எல்லாம் நான் சொல்லமாட்டேன். இனிமேல் எனக்குப் பிடித்த மாதிரி ஒரு கதை வர ஆறு மாதம், ஒரு வருடம் ஆனால் கூட காத்திருந்து தான் நடிப்பேன்." என்றார் பாவனா.