லெஜெண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம் `லீடர்'. இப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அப்படியான ஒரு பேட்டியில் ’லெஜெண்ட்’ படத்தில் சரவணனை கிண்டல் செய்து நிறைய ட்ரோல்ஸ் வந்தது. அப்படியான விஷயங்கள் இந்தப் படத்தில் வரக்கூடாது என மெனக்கெடல்கள் இருந்ததா? எனக் கேட்டக்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன துரை செந்தில் குமார், "நான் அதனை பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. எனக்கு என்னுடைய கிராஃப்ட் மேல் நம்பிக்கை இருந்தது. என்னால் கதையாய்ச் சொல்லிவிட முடியும், அதற்குத் தேவையான பயிற்சிகளை அவருக்கு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. படத்தில் அவருக்கு தாடி வைத்த லுக் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன், அதை அவரிடமும் சொன்னேன். 10 நாள் கழித்து என்னை அழைத்துக் காண்பித்தார், கச்சிதமாக இருந்தது. உடை, மேக்கப் என ஒவ்வொன்றையும் அப்படி கவனமாக முடிவு செய்தோம்.
மேலும் இந்தக் கதையே சாருக்காக எழுதியதுதான். ’Letter to god’ என்ற ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் குழந்தைகள் கடவுளுக்கு கடிதம் எழுதுவார்கள். அதிலிருந்து கிடைத்த ஒரு ஸ்பார்க்கை வைத்து உருவானதுதான் இந்தக் கதை. இந்தப் படத்தைப் பார்த்து முடித்தது அவருக்கு ரொம்ப சந்தோசம். அழைத்து அடுத்த படத்திற்கான அட்வைஸ் கொடுத்துவிட்டார்" என்றார்.