ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் X’ வெளியீட்டை முன்னிட்டு பேட்டியளித்த கௌதம், ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது தனது தவறு, வருத்தப்படக் கூடிய தேர்வு என ஒப்புக்கொள்கிறார். அப்போது புரிதல் இல்லாமல் செய்த அந்த படம் தனது திரைப்பயண தோல்விகளில் ஒன்றாக இருந்ததாகவும், அதன்பின் அப்படியான மாஸ் ஜானர் படங்களைத் தவிர்த்து, பல்வேறு வகை கதைகளைத் தேர்வு செய்ய முடிவு செய்ததாகவும் கூறுகிறார்.
ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார் நடிப்பில் மனு ஆனந்து இயக்கியுள்ள படம் ‘மிஸ்டர் X’. ஏப்ரல் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் பல பேட்டிகளை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் `முத்துராமலிங்கம் போன்ற படங்களில் நீங்கள் நடித்த போது பி, சி போன்ற சென்டர் மக்களை சென்றடைவது திட்டமாக இருந்ததா? என்ற கேள்வி கேட்கப்பட, அதற்கு பதில் சொன்ன கௌதம் கார்த்திக் "முத்துராமலிங்கம் நான் வருத்தப்படக் கூடிய ஒரு படம். அது என்னுடைய தவறுதான். அப்போது இது பற்றிய அறிவும், புரிதலும் இல்லை. அந்தப் படத்தை பொறுத்தவரை என் திரைப்பயணத்தின் தோல்விகளில் ஒன்று.
அப்படி ஒன்று நடந்தாலேயே நான் அப்படியான ஜானர் படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டேன். எனவே வேறு வேறு வகை படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்தேன். நான் சில தவறான தேர்வுகள் செய்திருக்கலாம், ஆனால் அதிலிருந்து கற்றுக் கொண்டு என்னுடைய பயணத்தை வடிவமைக்கிறேன். அப்போதுதான் இந்த மாதிரி மாஸ் கதைகளை மீண்டும் முயற்சிக்கலாம், ஆனால் அதை சரியாக செய்யக்கூடிய ஒரு இயக்குநர் கைகளில் அதை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்படி நடந்தது தான் முத்தையா சார் இயக்கத்தில் நடித்த `தேவராட்டம்'.
அப்படத்தின் மூலம் அவர் என்னுடைய தாக்கத்தை பி, சி சென்டர் ஆடியன்ஸுக்கு கொண்டு போனார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இன்னும் மாஸ் படங்கள் செய்வதில் எனக்கு பயம் இருக்கிறது. நான் ஒரு நடிகராக தான் என்னை நினைக்கிறேனே தவிர, மாஸ் மசாலா செய்யக்கூடியவராக அல்ல. அப்படியான படங்களை எப்போதாவது தான் செய்யவேண்டும். என்னால் அப்படி தொடர்ச்சியாக செய்ய முடியுமா என்பது சந்தேகமே. எனக்கு நிஜத்துக்கு நெருக்கமான படங்கள், அல்லது முழுக்க ஃபேண்டஸி படமாக தேர்வு செய்ய விரும்புகிறேன்." என்றார்.