அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடித்துள்ள படம் `அருள்வான்'. இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய ரம்யா பாண்டியன் "இந்தப் பட கதை கேட்கும் முன்னால் கிராமத்து படம் கொஞ்ச நாள் வேணாமேனு நினைத்துக் கொண்டே தான் கேட்டேன். ஆனா கணேஷ் சார் சொன்னதும் நடிக்க ஆசை வந்தது.
படிக்கும் இடத்தில் வசதிகள் இல்லை என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் படிக்கவே வசதி இல்லை எனும் நிலை இன்னும் தொடர்கிறது என்பதை சொல்லும் படத்தின் கரு பிடித்திருந்தது. வரைபடத்திலேயே இல்லாத லொகேஷன்களுக்கு சென்று தான் படம்பிடித்தோம். அங்கு போக்குவரத்து தான் கடினமாக இருந்ததே தவிர, அங்கு வாழ்வதற்கும் அங்குள்ள மக்களுடன் பழகவும் மிகவும் பிடித்தது. சுகுமார் சார் ஒளிப்பதிவில் ரா ரா படம் நடித்தேன். கிராமத்தை மிக பிரம்மாண்டமாக காட்ட அவரால் தான் முடியும்.
அருள்நிதி சார் ஒரு நம்பிக்கை நாயகன் என தான் சொல்ல வேண்டும். படத்தில் அவர் இருக்கிறார் என சொன்னாலே படம் நன்றாக இருக்கும் என ஒரு நம்பிக்கை வந்துவிடும். கண்டிப்பாக இந்தப் படத்தில் விஷயம் உள்ளது, அதனால் தான் அவர் நம்பி இருக்கிறார். ஆரவ் மிகவும் அர்பணிப்பான நடிகர். அவ்வளவு குளிரிலும் சந்தானம் எல்லாம் பூசிக் கொண்டு நடித்தார்." என்றார்.