தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் `ட்ரெயின்', பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் `பத்தா', `Slum Dog: 33 Temple Road' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் `பாக்கெட் நாவல்', மணிரத்னம் இயக்கும் படம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கேமியோ ரோலில் ஏன் நடிப்பதில்லை என்பதை பகிர்ந்து கொண்டார். அது பற்றி கூறுகையில் "கேமியோ ரோல் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது ஜெயிலர் 2வில் நடித்திருப்பது மட்டும் விதிவிலக்கு. அது ரஜினி சாருடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசைக்காக செய்தது. ரஜினி சார் பட போஸ்டரில் நம்மை வைத்தாலும் பெரிதாக கவனிக்கமாட்டார்கள்.
ஆனால், சில படங்களில் நம்முடைய படத்தை பெரியதாக போட்டுவிடுகிறார்கள், அது மற்ற படங்களை பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே அதை செய்வதை நிறுத்திவிட்டேன். மற்றபடி நான் ஒரு கதை ஒப்புக்கொள்ள அந்தக் கதைதான் காரணமாக இருக்கிறது. யாரும் செய்யாத பாத்திரம் என்பதால் எனக்கு தயக்கம் இருந்தது இல்லை. இனிமேல் இது போன்ற பாத்திரங்களுக்கு நாம் முன்மாதிரியாக இருப்போம் என நடித்துவிடுவேன்" என்றார் விஜய் சேதுபதி.