ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19ம் தேதி வெளியாகும் என முதல் பாகத்தின் இறுதியிலேயே அறிவிக்கப்பட்டது.
இன்று `துரந்தர் தி ரிவென்ஞ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் ஹம்சா பாத்திரம், ரஹ்மான் தாக்கித் குழுவுக்குள் எப்படி இணைந்தார் என்பது காட்டப்பட்டது. இரண்டாவது பாகத்தில் ஹம்சா (எ) ஐஸ்கிராத் சிங் வாழ்க்கையில் என்ன நடந்தது, லையாரி பகுதி எப்படி ஹம்சா (எ) ஜஸ்கிரத் கைக்கு வருகிறது, ஆப்ரேஷன் துரந்தரின் இறுதி லட்சியம் என்ன என்பதெல்லாம் இந்த பாகத்தில் சொல்லப்பட இருக்கிறது. கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் வன்முறை மிக அதிகமாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.
ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் ரன்வீர் உடன் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் இந்த பாகத்திலும் வருகிறார்கள். துரந்தர் படத்தின் நீளம் 3 மணிநேரம் 34 நிமிடங்கள் இருந்தது, இந்த பாகம் 3 மணிநேரம் 55 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. எனவே படம் கிட்டத்தட்ட 4 மணிநேரம். முதலில் இப்படத்துடன் இணைந்து யஷ் நடித்த `டாக்சிக்' படமும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த போட்டியிலிருந்து `டாக்சிக்' விலகிக் கொண்டதால், `துரந்தர் தி ரிவென்ஞ்' படம் பெரிய ரிலீஸ் ஆக உள்ளது. மார்ச் 19ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முந்தைய நாள் மார்ச் 18 மாலை சிறப்புக் காட்சி (Paid Premiere) இந்தியா முழுக்க திரையிடப்பட உள்ளது.