`கேரளா ஸ்டோரி' என்ற பொய் பிரச்சாரத்தை ஆவணமாக தயார் செய்கிறார்கள்! - அமீர் | The Kerala Story 2
தமிழ் இயக்குநர் அமீர், 'கேரளா ஸ்டோரி 2' போன்ற படங்கள் சமூகங்களை பிரிக்க பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகிறார். அவர், பொய் பிரச்சாரங்களை எதிர்க்க, உண்மையை ஆவணமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். போராட்டம் மட்டுமே போதாது, சரியான கருத்தை களத்தில் வைப்பதே முக்கியம் என அவர் கூறுகிறார்.
தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் நடிகர் அமீர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், `கேரளா ஸ்டோரி 2' போன்ற படங்கள் வருவதை பற்றி கேட்கப்பட "சினிமா என்பது அறிவியல். அந்த அறிவியலை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். கண்டுபிடிப்புககளை மனித அழிவுக்காக பயன்படுத்துவது எல்லா விதத்திலும் தவறு. `கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் எதற்கு பயன்படுகிறது? இரண்டு சமூகத்தை பிரிக்க, ஒரு சமூகத்தை குற்ற சமூகம் ஆக்க தான் பயன்படுகிறது. அதை எப்படி அறிவியலாக பார்க்க முடியும். இதுபோன்ற பொய் பிரச்சாரத்தை சுமந்து வரும் படங்களை போராட்டத்தின் மூலமாக மட்டும் எதிர்கொள்வது என்றால் நீங்கள் பின்தங்கி இருக்கிறீர்கள் என அர்த்தம். அவர்கள் தவறான கருத்தை எடுத்து வந்தால், நீங்கள் சரியான கருத்தை எடுத்து வந்து களத்தில் வையுங்கள். அதுதான் சரியாக இருக்கும். அதைவிட்டு அவர்கள் படம் எடுப்பது, இவர்கள் போராடுவது என்பது என்ன விதத்தில் சரியாக இருக்கும்?
உங்கள் மீது வைக்கப்படும் அரசியல் ரீதியான கருத்தை பொது வெளியில் எப்படி எதிர்கொள்கிறீர்களோ, அதே போல திரைப்படங்கள் மூலமாக அவதூறு சொல்லும் போது, உண்மை என்ன என்பதை நீங்களும் படமாக சொல்லுங்கள். அதை விடுத்து, நான் போராடிவிட்டு மறுபடி `கேரளா ஸ்டோரி 3' வரும் வரை காத்திருப்பேன் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் இதை பற்றி பேசாமல் அப்படியே கடந்து போ என்று சொல்வது சூழ்ச்சி அரசியல். இந்தப் படம் திரையரங்கில் போடுவதற்காக தயாரிக்கப்படுவதல்ல. அது ஒரு ஆவணமாக இருக்கும். நீங்கள் வாழ்ந்து இறந்த பின்னும் உங்கள் சந்ததியினர் பார்க்க அந்தப் படம் ஓடிடியில் இருக்கும். இது போன்ற பொய் பிரச்சாரங்களை உண்மை தான் என வரும் தலைமுறையினரை நம்ப வைக்கும் ஏற்பாடுதான் அது. நீங்கள் அதனை வெறும் படமாக கடந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் இதனை எதிர்க்க வேண்டும், அதற்கு எதிர் கருத்தை முன் வைப்பதும் ஆவணம் தான்.
பெரியார் பெண்களின் கர்ப்பபையை அகற்ற சொன்னார் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய தம்பிகள் சொல்கிறார்கள். ஆனால் அவர் என்ன காரணத்திற்காக அதை சொன்னார்?, அதன் சாரம் என்ன? என்பதை எதிர்தரப்பினர் முன் வைக்கிறார்கள், இது இரண்டுமே ஆவணமாகும். இதை தானே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்ய வேண்டியது. அப்படி இருக்க கேரளா ஸ்டோரியில் இப்படி நடந்தது என ஒருவன் சொன்னால், அப்படி நடக்கவில்லை என்பதையும் ஒருவன் சொல்ல வேண்டுமல்லவா. எனவே எதிர்ப்பு மட்டும் போதும் என நினைத்தால் பின்தங்கி இருக்கிறோம் என அர்த்தம். அந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துவிட்டார்கள், நீங்கள் எடுக்கவில்லை என அர்த்தம்." என்றார்.

