`ட்யூட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சாய் அப்யங்கர், இப்போது பரபரப்பாக பல படங்களில் பிஸி. அடுத்தாக சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் என பணியாற்றி வருகிறார். சினிமாவில் பிரபலமாகும் முன்பு சாய் அப்யங்கர் தனது தனியிசை பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் `கட்சி சேர', `ஆச கூட', `சித்திர புத்திரி', `விழி வீக்குற' போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது. சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், இப்போது தன் ஐந்தாவது இன்டி பாடல் `பவழ மல்லி' பாடலை நேற்று வெளியிட்டார்.
இப்பாடலின் வெளியீட்டு நிகழ்வில் அடுத்து பணிபுரியும் படங்களின் அப்டேட் சொன்ன சாய் " `கருப்பு' ஏப்ரலில் வருகிறது, தனுஷ் சாருடைய D55 படம் நடந்து கொண்டிருக்கிறது, அல்லு அர்ஜூன் சார் - அட்லீ அண்ணா படம் கம்போசிங் நடக்கிறது. நான் அட்லீ அண்ணாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என்னை அவர் முதலில் சந்தித்த போது, இந்தப் படமும் ஒப்பந்தமாகவில்லை. நான் ஓரே ஒரு பாட்டை போட்டு காட்டினேன், அதைக் கேட்ட அடுத்த நொடி, என்னுடைய அடுத்த படத்தில் நீ பணியாற்றுகிறாயா? என்று கேட்டார். எனக்கு தலையே சுத்திவிட்டது. அவர் என் மேல் வைத்த நம்பிக்கையால் தான், எனக்கு என் மேல் நம்பிக்கை இன்னும் அதிகமானது." என்றார்.
சமூக வலைத்தளங்களில் வரும் ஹேட்டர்ஸை கையாள்வது எப்படி என கேட்கப்பட "காதல் கொண்டேன் படத்தில் ஒரு வசனம் வரும், `வெறி வேணும்டா வெறி, பயங்கரமாக வேலை செய்யணும்னு வெறி வேணும்'. அது என்னுடைய பெற்றோர்களால், குருவால் கிடைத்திருக்கிறது. நன்றாக வேலை செய்வது மட்டும் தான் இப்போது என்னுடைய கவனம். நெருப்பில் கால் வைத்தால் எரிய தான் செய்யும். அதை தாங்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டும்." என்றார் சாய் அப்யங்கர்.