பைசன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்குநர்களுக்கு பதிலடி கொடுத்த அமீர், சமூக பிரச்சனைகளை கலை வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். கண்ணுக்கு தெரியாத விஷயங்கள் வெற்றி பெறும் நிலையில், சாதி பிரச்சனைகளை படமாக எடுக்கக் கூடாது என்பது அபத்தமாக இருக்கிறது என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமீர் "திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாது என்பதும், கேள்வியை முன் வைப்பது அபத்தமாக இருக்கிறது.
மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில் அரசியல் சார்ந்தவர்கள் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ரொம்ப நாளாக அடித்தோம், அப்படியே அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தானே, எங்கே இருந்து உங்களுக்கு இந்த தைரியம் என்ற கேள்வியாக இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது அதை ஏன் வெளியே சொல்கிறாய்? என்ற எண்ணமாக இருக்கலாம். இதனை அரசியல் சார்ந்தவர்கள் அமைப்பு சார்ந்தவர்கள் சொல்லும் போது லாஜிக் இருப்பதாக பார்க்கிறேன்.
ஆனால் திரைத்துறையில் இருந்து வரும் எதிர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன். அதிலும் ஒரு இயக்குநர் இந்தப் படம் பற்றி பேசும் போது, ஒரு பாடல் பாடி காண்பிக்கிறார். மிக கேவலமாகவும், குரூரமாகவும் `பைசன் பைசன் பைசன், அது பாய்சன்' என நாராசமான குரலில் பாடினார். நான் கேட்கிறேன், அவர் ஒரு கருத்து வைத்திருக்கிறார், அதை கலையின் மூலம் வெளிக் கொண்டு வருகிறார். உன்னிடம் நிஜமாகவே கருத்து இருந்தது என்றால் நீயும் அதை கலையின் மூலம் கொண்டு வரவேண்டியது தானே. அப்படித்தானே நீ சண்டையிட வேண்டும். அதற்கு உன்னிடம் திராணி இல்லை, அந்தக் கலைவடிவத்தில் வெளிப்படுத்த முடியவில்லை என்றால், அவதூறு பரப்பாதே, ஏன் எடுக்கிறார் எனக் கேட்காதே" என்றார்.