யானை தந்தம் வழக்கு | மோகன்லால் உரிமத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்றம்!
நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டப்பூர்வமானது அல்ல என கூறி அதை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் நடிகர் மோகன் லாலும் ஒருவராக உள்ளார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் நான்கு யானை தந்தங்களைக் கைப்பற்றிய வருமானவரித் துறையினர், அந்த தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக அவர் தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ஆம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு கேரள அரசால் உரிமம் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.
கீழ்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது.
நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டப்பூர்வமானது அல்ல என கூறி அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில், நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும்” என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

