விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தனது தயாரிப்பில் நஷ்டம் அடைந்த படங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 'ஆரஞ்சு மிட்டாய்', 'ஜூங்கா', 'மேற்கு தொடர்ச்சிமலை', 'லாபம்' போன்ற படங்கள் நஷ்டம் அடைந்தாலும், 'முகிழ்' படம் லாபம் கொடுத்தது. படங்கள் நஷ்டம் அடைந்தாலும், தனது விருப்பமான கதைகளை தயாரிக்க முடிந்த மகிழ்ச்சி முக்கியம் என அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கூடவே தொடர்ந்து பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தான் தயாரித்த படங்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தது பற்றி சமீபத்தியா பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இது பற்றி அவர் கூறுகையில் "நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பதாகவே இல்லை. ஆனால் சங்குத்தேவன் என்ற ஒரு படத்தில் ஒப்பந்தமானேன். அந்தப் பட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், நானே தயாரிக்கலாம் என முடிவுக்கு வந்தேன். கதை பிடித்திருக்கிறது, ஒருவர் பைனான்ஸ் செய்ய போகிறார், நாம் காப்பி ரெடி செய்து கொடுக்க போகிறோம் என்று தான் துவங்கினேன். சில காரணங்களால் அந்தப் படத்தை எடுக்க முடியவில்லை. அதில் எனக்கு கிட்டத்தட்ட 1.75 கோடி நஷ்டம். அந்தப் படத்திற்கு எனக்கு சம்பளமே 15 லட்சம் தான்.
அதன் பிறகு `ஆரஞ்சு மிட்டாய்' படத்தை நண்பருடன் இணைந்து எடுத்தேன். அது நஷ்டமானபோது என் பங்கு நஷ்டத்தை நான் அளித்தேன். `ஜூங்கா' படமும் நஷ்டமானது. அதன் பின்னர் எடுத்த `மேற்கு தொடர்ச்சிமலை' படமும் நஷ்டம் தான் ஆனது. `லாபம்' படமும் நஷ்டம். பின்னர் 1 மணிநேர படம் ஒன்றை தயாரித்து நான், என் மகள் நடித்து ஒரு படம் (முகிழ்) எடுத்தோம். அதுதான் என் தயாரிப்பில் சின்னதாக லாபம் கொடுத்த படம்.
மற்றபடி எல்லா படங்களிலும் அடி தான் விழுந்தது. இதில் ஒரே விஷயம் என்ன என்றால், படம் நஷ்டம் ஆனால் அந்தக் கடனை அடைத்துவிட்டு மீண்டும் படம் எடுக்க செல்வதுதான் என்னுடைய வழக்கமாக இருக்கும். எனக்கு பிடித்த படங்களை என்னால் தயாரிக்க முடிகிறது என்ற மகிழ்ச்சி முக்கியம் என நினைக்கிறேன். இவ்வளவு நஷ்டம் என்றாலும் எனக்கு இதில் எந்தப் படம் தயாரித்ததிலும் வருத்தமில்லை.
எனக்கு `ஆரஞ்சு மிட்டாய்', `ஜூங்கா', `மேற்கு தொடர்ச்சிமலை' எல்லா படமும் பிடிக்கும். `லாபம்' படமும் மிகப் பிடிக்கும். ஜனநாதன் சாரின் கடைசி படத்தில் நடிக்க முடிந்ததை பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்த படம். உலகில் எந்த தொழிற்சாலையும் விவசாயிகளை நம்பித்தான் இருக்கிறது என்ற பார்வையை அவர் தான் கொடுத்தார். பணம் சம்பாதிப்பதில் இருக்கும் வசதி, நமக்கு பிடித்ததை நம்மால் செய்ய முடியும். அதில் தவறு ஏற்பட்டாலும் அதை சரி செய்ய முடியும். என்ன அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும், இருந்தாலும் சரி செய்துவிடலாம். இப்போது இந்த `முத்து என்கிற காட்டான்' ஜியோ பணம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறோம்." என்றார்.