விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அருண்குமார் இயக்கிய `வீர தீர சூரன் பாகம் 2'. இப்படம் வெளியாகி ஓராண்டு கடந்த பின்னும் தன்னுடைய அடுத்த படத்தை துவங்காமலே இருக்கிறார் விக்ரம். தற்போது இவரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் உலவி வருகிறது.
முதலில் `மண்டேலா', `மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் `96', `மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்து போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் எதுவுமே அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 20ம் தேதி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் "நல்ல கதைகளுக்காக தான் காத்திருந்தேன். இப்போது, அப்படிப்பட்ட நான்கு கதைகளை தேர்வு செய்துவிட்டேன். நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்களுடன் அப்படத்தை துவங்க உள்ளேன்" என பதிவிட்டார்.
இப்போது இவர் சத்ய ஜோதி தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இவர்கள் இணைந்து `இருமுகன்' படத்தில் பணிபுரிந்தனர். ஆனந்த் சங்கர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், உடனே ஓகே சொல்லிவிட்டார் எனவும், இப்படத்தின் அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறதாம். விக்ரம் இதில் வித்தியாசமான லுக்கில் வருவார் எனவும், விக்ரமின் பிறந்தநாள் ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தின் அறிவிப்பு வரும் எனவும் தகவல். இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் முதல் வாரத்தில் துவங்குவதாக சொல்லப்படுகிறது.