Nivetha Thomas, Sreeleela AI
கோலிவுட் செய்திகள்

இது டிஜிட்டல் ஆள்மாறாட்டம்! | AI அத்துமீறலை எச்சரித்த ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ்

ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர், அவள் கலையை தனது தொழில்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தாலும் கூட.

Johnson

AI தவறாக பயன்படுத்தி பல அத்துமீறல்கள் தொடர்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சினிமா பிரபலங்கள் இதில் முக்கியமாக குறிவைக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து பல நடிகைகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இன்று நடிகை ஸ்ரீலீலா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி பதிவிட்டிருக்கும் ஸ்ரீலீலா "நான் இருகைகளையும் கூப்பி சமூக ஊடகப் பயனர்கள் அனைவரையும் கேட்பது என்னவென்றால், AI மூலம் உற்பத்தி செய்யப்படும் முட்டாள்தனங்களை ஆதரிக்க வேண்டாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்காகவே, சிக்கலாக்குவதற்காக அல்ல என்பது என் கருத்து. ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர், அவள் கலையை தனது தொழில்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தாலும் கூட. நாம் ஒரு பாதுகாக்கப்பட்ட சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு துறையில் ஒரு பகுதியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

எனது பணிகளின் காரணமாக ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து எனக்குத் தெரியாது, இதை என் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்காக எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் விஷயங்களை மிக லேசாக எடுத்துக் கொண்டு என் சொந்த உலகில் வாழும் நபர், ஆனால் இது மிகவும் தொந்தரவாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. எனது சக ஊழியர்களும் இதையே எதிர்கொள்வதை நான் காண்கிறேன், அனைவரின் சார்பாகவும் நான் இங்கு பேசுகிறேன். கருணையுடனும் கண்ணியத்துடனும், என் பார்வையாளர்கள் மீது நம்பிக்கையுடனும், தயவுசெய்து எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கிருந்து அதிகாரிகள் இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொள்ளட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிவேதா தாமஸ் தன்னுடைய பதிவில் "எனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி AI-யால் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் எனது சமூக ஊடகங்களில் நான் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் ஆன்லைனில் பரப்பப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. ஒப்புதல் இல்லாமல் இதுபோன்ற படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் மிகவும் தொந்தரவானது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது. இது டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் எனது தனியுரிமையின் மீதான கடுமையான தாக்குதலாகும்.

இதற்கு பொறுப்பானவர்கள் மற்றும் பெயரை மறைத்துக் கொண்டு இயங்கும் கணக்குகள் ஆகியோர்  உடனடியாக அத்தகைய செயல்களை நிறுத்தி, படங்களை அகற்றுங்கள். இத்தகைய செயல்களை யாரும் ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அத்தகைய உள்ளடக்கத்தை எந்த வடிவத்திலும் பகிரவோ வேண்டாம். இனி இது தொடர்ந்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.