R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

A King Is Coming For His Throne.. சூர்யாவுக்கு மாஸ் சேர்த்த ஆர் ஜே பாலாஜி | R J Balaji | Karuppu

'கருப்பு' படம் நடக்க முக்கியமான ஒரு மனிதர் சூர்யா சார். நான் அவருக்கு 45 நிமிடம்தான் கதை சொன்னேன். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, " ‘வலிமை' படத்துக்குப் பிறகு அதிக முறை அப்டேட் கேட்கப்பட்ட படம் `கருப்பு'தான். ஆனால் முதல் அடி எஸ்.ஆர்.பிரபுவுக்குத்தான் விழும். அவரைத்தான் ரசிகர்கள் டார்கெட் செய்தார்கள். எனக்கும் அவருக்கும் சில சண்டைகள், வாக்குவாதங்கள் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது நாங்கள் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். பல கோடிகளைச் செலவு செய்து எனக்கு உறுதுணையாக இருந்தது `கருப்பு' குடும்பம். நானும் 100 சதவீத உழைப்பை இப்படத்துக்குக் கொடுத்துள்ளேன்.

Karuppu

சாய் அப்யங்கர் முதன்முதலில் ஒப்பந்தமான படம் `கருப்பு'. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தமாகிவிட்டார். நான் அவரது வீட்டுக்குச் சென்றபோது ஒரு ஹெலிகாப்டர் இருந்தது. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட இசையமைப்பாளர். இந்தப் படத்துக்குள் அவரைக் கொண்டு வந்தது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என இப்போது தோன்றுகிறது. அவருடைய பாடல்கள் சிலநேரம் கேலி செய்யப்படலாம். ஆனால் வெறும் 15 நிமிடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது. 

இன்று த்ரிஷா நம்முடன் இணைய முடியவில்லை, ஆனால் நான் அவருக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும். த்ரிஷாவாக இருப்பது சாதாரண விஷயமில்லை. 23 வருடங்களாக உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர் சமீபத்தில் நடித்ததில் சிறப்பான கதாபாத்திரமாக இது இருக்கும்.  பெரிய படத்தையும் பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அதற்கு எனக்கு ஒரு மனிதர் துணையாக இருந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுதான் அது. ஒரு ஹீரோவை எப்படி மாஸ் ஆக காட்டுவது என அவருக்குத் தெரியும்.

R J Balaji

’கருப்பு’ படம் நடக்க முக்கியமான ஒரு மனிதர் சூர்யா சார். நான் அவருக்கு 45 நிமிடம்தான் கதை சொன்னேன். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவிகூட, ’சூர்யா சார் உன்கூட படம் பண்றாரா’ என ஆச்சரியப்பட்டார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வைத்தார், அவருக்குச் சிறப்பானதே கொடுக்க நான் விரும்பினேன். பொதுவாக பெரிய ஹீரோ படங்களில் எல்லா காட்சிகளிலும் ஹீரோ மட்டும்தான் இருப்பார். ஆனால் ’கருப்பு’ படத்தில் அவர் இல்லாமலும் நிறைய காட்சிகள் இருக்கின்றன. அதற்கு அவர் சம்மதித்தார். திரையில் அவர் கண்ணாலேயே நிறைய பேசுவார். இதற்கு மேல் படம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. கமர்ஷியல் முதல் பாதி, ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஹை கொடுக்கும் இரண்டாம் பாதி ஆக உருவாகி இருக்கிறது. A King Is Coming For His Throne. ரசிகர்கள் பலரும் போஸ்டர்களில் ஏன் ரிலீஸ் தேதி போடவில்லை எனக் கேட்கிறார்கள். நாங்கள் அதனைச் செய்தால் சென்சார் போர்டு குத்துவார்கள். சீக்கிரம் வருகிறோம், பட்டாசை எடுத்து வையுங்கள். மே 14 பண்டிகை வரப் போகிறது” என்றார்.