singer srinivas - vijay web
சினிமா

”உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும்..” விஜய்க்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் வாழ்த்து!

மக்கள் ஊழலால் அதிகம் சோர்வடைந்துவிட்டார்கள், உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும் போதுமென நினைத்துவிட்டார்கள் என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் பதிவிட்டுள்ளார்.

Rishan Vengai

தமிழக அரசியலில் வரலாறு காணாத மும்முனை போட்டியில், விஜயின் தவெக 34.92% வாக்குகளுடன் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக-அதிமுகவைத் தாண்டி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றியை ‘ஜனநாயகத்தின் உண்மையான வடிவம்’ என பாடகர் ஸ்ரீநிவாஸ் பாராட்டி, சாதாரண மக்களின் வாழ்க்கை மேம்படும் என்ற நம்பிக்கையுடன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாதளவு ஒரு மும்முனை போட்டியை தமிழக அரசியல் களம் கண்டுள்ளது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிப்பெரும் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.

TVK leader Vijay

முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், பாடகர் ஸ்ரீநிவாஸும் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது விஜயின் தவெக முன்னிலை பெற்றபோதே சமூகவலைதளத்தில் பதிவிட்ட பாடகர் ஸ்ரீநிவாஸ், “உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும், மறைந்த தலைவர்களைப் புகழ் பாடுவதும் போதும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தேவையெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே. தரமான சாலைகள், நல்ல கல்வி மற்றும் மருத்துவம் வேண்டும். ஊழலால் மக்கள் சோர்வடைந்துவிட்டார்கள். எனவே, விஜய் மக்கள் மத்தியில் ஒரு பெரிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என பதிவிட்டிருந்தார்.

இந்தசூழலில் இன்று பதிவிட்டிருக்கும் அவர், “விஜய் ஈட்டியுள்ள இந்த பிரம்மாண்டமான வெற்றி, ஒட்டுமொத்த அரசியல் களத்தையுமே திகைக்க வைத்துள்ளது. காலப்போக்கில் சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் உங்கள் ஆட்சி அமைய, என்னுடைய வாழ்த்துக்கள். இதுவே மக்களாட்சியின் மிகச்சிறந்த வடிவமாகும், 'ஜனநாயகம்' எனும் சொல்லின் உண்மையான பொருளே தேர்தல் களத்தில் இத்தனை அழகாகப் பிரதிபலித்துள்ளது. உங்கள் நல்ல நோக்கங்களின் துணையோடு, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையிலான உறுதியான மாற்றம் நிச்சயம் நிகழும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.