ARRahman - Seeman
ARRahman - Seeman File image
சினிமா

“கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டது ரகுமானின் நேர்மையை வெளிப்படுத்துகிறது” - சீமான்

PT WEB

செப் 10-ம் தேதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் பேசுபொருளான நிலையில் இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்த நிறுவனம் அசௌகரியத்திற்காக மன்னிப்பு கோரியது.

பின்னர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், “டியர் சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும் எதிர்பாராத சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியாதவர்கள் நீங்கள் வாங்கிய டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். உடன் உங்களது குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ரஹ்மான் மீதான இணைய வழி தாக்குதல்கள் குறையவில்லை. இதையடுத்து திரைத்துறையில் அவருக்கு ஆதரவுக்கரங்கள் எழுந்தன. அந்தவகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, குஷ்பு என பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்த வரிசையில் நடிகரும் அரசியல் தலைவருமான சீமானும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,

“உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது ‘மறக்குமா நெஞ்சம்?' எனும் இசை நிகழ்ச்சி விழாவில் ஏற்பட்டக் குளறுபடிகளும், சிரமங்களும் வருத்தத்திற்குரியது. இடங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டக் குழப்பங்களினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டதால் நேர்ந்த பாதிப்புகளினாலும் பொதுமக்கள் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் மிக நியாயமானது. அதனை உணர்ந்தே சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தார்மீக அடிப்படையில், நடந்தத் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வருந்தியிருக்கிறார்.

மேலும், இந்நிகழ்ச்சியைச் சரிவர காண இயலாது பாதிக்கப்பட்டதாக தெரிவித்தப் பார்வையாளர்களுக்கு அவர்களுக்குரிய நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது நேர்மையை வெளிப்படுத்துகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு பொது நிகழ்ச்சி குறித்தானத் திட்டமிடலையும், ஒழுங்கமைவையும் ஆழமாகக் கண்காணித்து, அதனை நெறிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும். ஏற்பாட்டாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு முழு உரிமையுண்டு.

இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களையும், அவர்களது செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறிய அரசுத்துறையைச் சேர்ந்தவர்களையும் விடுத்து, இசை நிகழ்ச்சி நடத்திய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கச் சொல்லி குற்றப்படுத்துவது சரியானதல்ல!

மறக்குமா நெஞ்சம்

அந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டாளர்களது நிர்வாகத்திறமையின்மையினாலும், அலட்சியத்தினாலும் விளைந்த துயருக்கு சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீது ஒருசாரார் வன்மத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த நிகழ்வை வைத்து அவரது சமூக மதிப்பைக் கெடுக்கும் நோக்கோடு, பெரும் காழ்ப்புணர்ச்சி கொண்டு, சமூக வலைத்தளங்களில் நச்சுக்கருத்துகளைப் பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டதாகும்.

சீமான்

இசைத்தமிழன் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீதானத் தனிப்பட்டத் தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல. தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழர்களின் பெருமிதத்திற்குரியப் பேராளுமையாவார்.

சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிசெயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.