தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் `டிராகன்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின்னர் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளார் என்.டி.ஆர். குறிப்பாக, புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. போர் கடவுள் முருகர் சம்பந்தப்பட்ட படமாக இது இருக்கும் எனவும், படத்தின் பெயர் GOD OF WAR எனவும் சொல்லப்படுகிறது.
முருகன் தமிழ்க்கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். ஆனால் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சமஸ்கிருதம் இடம்பெற்றுள்ளதும், வடக்கில் பிறந்தார் என குறிப்பிட்டு தயாரிப்பாளர் பகிர்ந்த எக்ஸ் தள பதிவும் இணையத்தில் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. தமிழ் கடவுள் பற்றிய படத்தின் போஸ்டரில் சமஸ்கிருதம் எதற்கு எனவும், முருகன் எப்போது வடக்கில் பிறந்தார் எனவும் கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர்.
அந்தவகையில் தான், தமிழ்க்கடவுள் முருகன் வட இந்தியாவில் பிறந்தவர் என்று படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி என்.டி.ஆர். திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில் தமிழர் இறையோன் முருகன் வட புலத்தில் பிறந்தவர் என்ற கருத்து உருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு பதிவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலை, இது போன்ற வரலாற்று திரிபுகளை உண்மை என கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. 50,000 ஆண்டுகளுக்கு மூத்த தொன்மை வரலாறு கொண்டது தமிழ் பேரினம். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு வழித்தொளிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீர வரலாற்றையும் பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் இந்த நேரத்தில் கற்பனை படைப்புகள் மூலம் இது போன்ற உண்மைக்கு புறம்பான பிரிவுகள் தினைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என கூறுவார்கள். ஆகவே முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது கட்டுக்கதை பட குழு உடனடியாக இதனை கைவிட வேண்டும். இல்லை என்றால் மிகக் கடுமையான எதிர் விளைவுகளை எதிர்க்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் தமிழ் பதிப்பையோ தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.