சல்லியர்கள் திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஈக வரலாற்றை பேசும் முக்கியமான படைப்பாகும். திரையரங்குகளில் போதிய ஆதரவு இல்லாததால், தற்போது OTT PLUS தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சீமான், இந்த படத்தைப் பார்த்து பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமென தமிழர்களை அழைத்துள்ளார்.
இயக்குநர் கிட்டு இயக்கத்தில், கருணாஸ் நடித்துள்ள படம் ”சல்லியர்கள்”. ஈழவிடுதலைப் போர் குறித்து எடுக்கப்பட்ட இப்படம், புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இன்று நேரடியாக ஓடிடி ப்ளஸ் (OTT PLUS) தளத்தில் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, 27 ஷோக்கள் மட்டுமே சல்லியர்கள் படத்துக்கு திரையரங்குகள் கொடுக்கப்பட்டதாகவும், பி.வி.ஆர் தியேட்டர் ஒன்று கூட கிடைக்கவில்லை எனவும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான், ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும்.
இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் கடந்து சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.