மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள், மம்மூட்டி மற்றும் மோகன்லால். இந்த நிலையில், மோகன் லால் சபரிமலையில் கடந்த 18ஆம் தேதி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நடிகர் மம்மூட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. அவர் உடல்நிலை சரியில்லாததைத் தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, தேவசம் அலுவலகம் வெளியிட்ட மேற்கூறிய ரசீது சமூக ஊடகங்களில் வைரலானது. இதை சில பயனர்கள், ’சமூக நல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டு’ என்று பாராட்டினர். இருப்பினும், மற்றொரு தரப்பினர், மம்முட்டி மதத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.
இதுகுறித்து முன்னாள் பத்திரிகையாளரான ஓ.அப்துல்லா, ”மோகன்லாலை தனக்காக மம்மூட்டி பிரார்த்தனை செய்யச் சொன்னால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் பிருத்விராஜ் சுகுமாரன், “இருவருமே (மம்மூட்டி - மோகன்லால்) இதுபோன்ற ஒன்றைச் செய்வது இது முதல் முறை அல்ல. எனினும், இந்த முறை, அது செய்திகளில் இடம்பிடித்துள்ளது" என்றார்.
இதுதொடர்பாக மோகன்லால், ”மம்மூட்டியுடன் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வாரமும் சந்திப்போம். நாங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். பிரார்த்தனைகள் தனிப்பட்டவை. மம்முட்டிக்காக பிரார்த்தனை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு, லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு பிரார்த்தனை செய்தேன். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். நடிகர் மம்மூட்டிக்கு, தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி, தெரியப்படுத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்றுச் சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உடல்நலக் கவலை காரணமாக மம்மூட்டிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அவரது குழுவினர் அதை, போலி செய்தி என்று கூறி உடனடியாக நிராகரித்தனர். ரம்ஜானுக்காக அவர் விடுமுறை எடுத்துள்ளதாகவும் நோன்பு இருப்பதாகவும், படப்பிடிப்புகளை ஒத்தி வைத்திருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.