நடிகர் ரவி மோகன்–ஆர்த்தி விவாகரத்து வழக்கில் முக்கிய திருப்பமாக, ஆர்த்தி கோரிய மாதம் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சத்தை சென்னை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதற்கு பதிலாக மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். இரு மகன்களை சந்திப்பதில் ரவிக்கு தடையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்த்தி தாக்கல் செய்திருந்த மாதம் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்ச கோரிக்கையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவி மோகன், 2009-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த நிலையில், 2024 செப்டம்பரில் இருவரும் பிரிந்து வாழப்போவதாக ரவி மோகன் அறிவித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குடும்பச் செலவுக்காக மாதம் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், விவாகரத்து வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை மாதம் ரூ.40 லட்சம் வழங்கத் தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக மாதம் ரூ.3 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக ஆர்த்திக்கு ரவி மோகன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மகன்கள் ஆரவ் மற்றும் அயானை சந்திப்பதற்கு ரவி மோகனுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது