Yash Ramayana, Toxic
சினிமா

இராமாயணத்தில் ராவணன்... டாக்சிக்கில் கேங்ஸ்டர்! - Yash | Ramayana | Toxic

இராமாயணா கதைகளை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். எங்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் ஒரு பகுதி அது. இதை ஒரு வழக்கமான படம்போல அணுக முடியாது.

Johnson

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற CinemaCon 2026 விழாவில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா உடன் கலந்துகொண்ட யாஷ் தனது `இராமாயணா' மற்றும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'  படங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

இராமாயணம் குறித்து கேட்கப்பட்டபோது, "இராமாயணா கதைகளை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். எங்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் ஒரு பகுதி அது. இதை ஒரு வழக்கமான படம்போல அணுக முடியாது. இதில் எல்லாப் பாத்திரங்களுக்கும் அதனதன் ஒரு கண்ணோட்டம் இருக்கும். அதில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் மிக நம்பிக்கையோடு செய்வார்கள். அதுதான் அதில் முக்கியமான அம்சமே. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கண்ணோட்டத்தில் சரியானவர்களே. ’ராமாயணா’ என்பது நல்லவர் கெட்டவர் பற்றிய கதை அல்ல. உனக்கு எவ்வளவு திறமையும், அறிவும் இருந்தாலும் உன்னுடைய செயல்களும், தீர்மானங்களுமே முக்கியம். அதைச் சார்ந்தே கர்மா இருக்கும். அதைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமான விஷயம்.

இராவணன் பல விஷயங்களை நம்புபவன். அவன் தன் மக்களுக்காகப் போராடுகிறான். அவனைப் பொறுத்தவரை அவனது நோக்கம் சிறப்பானது. ஆனால் நம்பிக்கைக்கும், அரக்கத்தனத்துக்கும் இடையிலான வித்தியாசமே இங்கு பிரச்னையாகிறது. அதுதான் இந்தப் படத்தின் தனித்துவமாக பதிவு செய்யப்படுகிறது. நானும் ரன்பீரும் இன்னும் இணைந்து நடிக்கவில்லை. இது இரு பாகங்களாக எடுக்கப்படும் படம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே முதல் பாகத்தில் நான் என்னுடைய ராஜ்ஜியத்தில் இருப்பதும், ராமா அவருடைய ராஜ்ஜியத்தில் இருப்பதுமே கதையாக இருக்கும். ஆனால், அவரை இருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் சிறந்த நடிகர். ஒருவர் மேல் ஒருவருக்கு நல்ல மரியாதை இருக்கிறது." என்றார்.

’டாக்சிக்’ படம் குறித்து கேட்டதும், "டாக்சிக் மிகப்பெரிய ஆர்வத்துடன் உருவாகி வரும் படம். எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்தப் படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம்போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய இயக்குநர் கீது மோகன்தாஸ் கேங்ஸ்டர் படத்தை ஒரு புதுமையான முறையில் கொடுத்துள்ளார்" என்றார் யஷ்.