prakash raj
prakash raj pt web
சினிமா

“கட்சிகளை விட்டுவிட்டு கலைஞர்களை தொந்தரவு செய்றீங்க” - சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!

PT WEB

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா தர மறுப்பதால் தமிழ்நாடு அரசு தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைக்கு கர்நாடகா, தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கன்னட மக்களும், சில அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. குறிப்பாக இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது.

நதிநீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தின் சித்தா படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (28.09.2023) பிற்பகல் நடந்தது. எஸ்.ஆர்.வி தியேட்டருக்குள் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அங்கு வந்த கன்னட அமைப்பினர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

மேலும், “காவிரி நதிநீர் பிரச்சனையில் பந்த் நடந்து வரும் நிலையில், இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி தேவையா” என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். அவர்களை சமாளிக்க முயன்ற நடிகர் சித்தார்த்தும் ஒருகட்டத்தில் அதிருப்தி அடைந்து பிரஸ் மீட்டில் இருந்து “நன்றி” என்று கூறிவிட்டு வெளியேறினார். வெளியேறினார் என்று கூறுவதைவிட கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

PrakashRaj ActorSiddharth Kannada

அத்துடன், கன்னட அமைப்பினர் மிகவும் ஆக்ரோஷமாக பேசி, எதிர்ப்பை வெளிப்படுத்தியபோதும், நடிகர் சித்தார்த் மிகவும் கண்ணியமாகவும் நிதானமாகவும் அவர்களை எதிர்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் “அரசியல் கட்சிகளை விட்டு கலைஞர்களை தொந்தரவு செய்றீங்க” என்று சித்தார்த்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் “நீண்ட காலமாக இருக்கும் இந்தப் பிரச்னையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேட்காமல், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார்.