தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் நேற்று மாலை பெங்களூருவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அதில் சாலைப் பாதுகாப்பு பற்றியும், போதைக்கு அடிமை ஆகாதீர்கள் என்பது பற்றியும் பேசியுள்ளார்.
இதில் பேசிய ஜூனியர் என்டிஆர், "என்னுடைய அண்ணன், அப்பா ஆகியோரை சாலை விபத்தில் இழந்திருக்கிறேன். நானும் ஒரு விபத்தில் சிக்கி மரணத்துக்குப் பக்கத்தில் சென்று வந்தேன். வாகனம் ஓட்டுவதிலும், சாலைப் பாதுகாப்பிலும் எல்லோரும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். பல நேரங்களில் பலரது குடும்பத்தினருக்கும் மோசமான விஷயங்கள் நடந்திருக்கலாம். எப்போதும் வாகனம் ஓட்டும்போது, உங்கள் குடும்பத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது, தானாக உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வைக் கொடுக்கும்.
விழிப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் நடந்த துர்மரணங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தில் நடக்கக் கூடாது என விரும்புகிறேன். மேலும் தயவுசெய்து Say No to Drugs. பொறுப்பு என்பது நமக்குள் இருக்க வேண்டும். இந்தச் செய்தி உங்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கும் என நினைக்கிறேன். இந்த நாட்டின் நல்ல குடிமகனாக வாழுங்கள்" என்றார்.