இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம், தமிழ் சினிமாத்துறையில் அவருடைய மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது. வசூல் ரீதியிலும் பட்டையை கிளப்பிய இப்படம் 330 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு, தன்னுடைய அடுத்த படமான SK25 திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய 22வது திரைப்படமான அமரன் திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக 24வது திரைப்படமாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், 25வது படமாக சுதா கொங்கராவின் இயக்கத்தில் 'புறநானூறு' எனும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்தப்படம் இந்தி திணிப்பு பற்றிய கதை எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலபேர் சேர்ந்து நடிக்கவிருப்பதாகவும், படத்தை டான் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாகவும், இதற்கான அப்டேட் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.