சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் பரத் வீடியோ பதிவும் வெளியிடுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள்:
1. சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை:
சின்னத்திரை தொடர்களில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத பலர் நடித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை கண்காணிக்க 'ஸ்குவாட்' (Squad) குழுக்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உறுப்பினராக இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை பெற 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளும் அவர்கள் கார்டு பெறவில்லை எனில், அவர்கள் நடிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்
2. சிறு கதாபாத்திரங்களிலும் சங்க உறுப்பினர்களே நடிக்க வேண்டும்:
ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுகள் (Junior Artist Agents) கூட்டத்தை (Crowd) மட்டுமே வழங்க வேண்டும்; வசனம் பேசி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆட்களை அனுப்பக் கூடாது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற ஒரு நாள், இரண்டு நாள் வரக்கூடிய சிறு கதாபாத்திரங்கள் என்றாலும், அதில் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. கூடுதல் நேரப் பணிக்கு கூடுதல் ஊதியம் (ஒப்பந்த நேரம் 9 to 9):
சின்னத்திரை படப்பிடிப்பு நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. சில சூழ்நிலைகளில் பணி நீட்டிக்கப்பட்டால், இரவு 12 மணி வரை வேலை செய்யும் பட்சத்தில் அரை நாள் கூடுதல் ஊதியமும் (Half-day pay), நள்ளிரவு 2 மணி வரை நீடித்தால் இரட்டிப்பு ஊதியமும் (Double pay) வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
4. நடிகர் உதவியாளர்களுக்கான புதிய கட்டுப்பாடு:
சமீபகாலமாக நடிகர்களின் உதவியாளர்கள் (Helpers/Assistants) தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதனை சீரமைக்க, உதவியாளர்களின் ஆதார் விபரங்களை சேகரித்து, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் (Under the Supervision of Chinna Thirai Nadigar Sangam) அவர்களுக்கு ஒரு பிரத்யேக 'டேக்' (Tag/அடையாள அட்டை) வழங்கப்படும். இந்த டேக் வைத்துள்ள உதவியாளர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் அமலுக்கு வரும் என்றும் நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.