Vimal web
திரை விமர்சனம்

வட மஞ்சுவிரட்டு, ஈகோ, காதல், துரோகம்... விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்? | Vadam Review | Vimal

வடமஞ்சு விரட்டு பின்னணியில் ஒரு பழிவாங்கல் கதை என்ற புது களத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன் என்பது ஓரளவு ஆர்வத்தை தூண்டுகிறது.

Johnson

காளையால் ஏற்படும் ஈகோ, காதலில் ஏற்படும் துரோகம் இரண்டும் சந்திக்கும் புள்ளியே `வடம்'

வெற்றி (விமல்) பாண்டி முனி என்ற தன் காளைமாட்டை அன்போடு வளர்ப்பது, அது கலந்து கொள்ளும் போட்டிகளில் வெற்றியை பெற பயிற்றுவிப்பது என சிங்கம்புணரியில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இவரின் தந்தை சந்தனவேல்தான் (நரேன்) ஊர்த்தலைவர். இன்னொருபுறம் வடமஞ்சு போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ரத்னவேல் (நட்டி) ஜெயிக்கும் காளை எல்லாமே தன்னிடம் தான் இருக்க வேண்டும் என நினைப்பவர். பாண்டிமுனியை விலை பேச முயலும் ரத்னவேலு முயற்சி தோல்வியில் முடிகிறது, கூடவே அதே காளையுடன் போட்டிக்கு போகும் ரத்னவேலு காளையும் தோற்கிறது. இதனால் உருவாகும் பகை வெற்றியை ஒரு கொலை வழக்கில் சிறைக்கு அனுப்பும் அளவு பெரிதாகிறது. என்ன நடந்தது? உண்மையில் யார் குற்றவாளி என்பதை எல்லாம் சொல்கிறது இந்த `வடம்'.

வடமஞ்சு விரட்டு பின்னணியில் ஒரு பழிவாங்கல் கதை என்ற புது களத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன் என்பது ஓரளவு ஆர்வத்தை தூண்டுகிறது.

Vadam

கிராமத்து நாயகன் என்ற தோற்றமே விமலுக்கு பலம் சேர்க்கிறது. தந்தையிடம் அமைதியாக பேசுவது, சண்டையில் ஆக்ரோஷம் என சில காட்சிகளில் ஈர்க்கிறார். ஆனால் அழுத்தமான பல காட்சிகளில் அவரின் நடிப்பு மிக சாதாரணமாகவே இருக்கிறது. நட்டிக்கு வழக்கம் போல ஒரு வில்லன் வேடம், அதை வழக்கம் போலவே செய்துவிட்டு போகிறார். சிரிப்புக்கு பாலசரவணன் துணை இருந்தாலும், காமெடிகள் எதுவும் பெரிதாக கவரவில்லை. கிராமத்து நாயகியாக சன்ஷ்கா ஸ்ரீ, பாடல்களுக்கு வருவது, ஹீரோவை காதலிப்பது, இடைவேளையில் சின்ன டிவிஸ்ட் என டெம்ப்ளேட் வேடம். ஊர்த் தலைவர்/தந்தை என பார்த்து சலித்த அதே வேடத்தில் நரேன், சைடு வில்லனாக பார்த்து பழகிய மதுசுதன் ராவ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்கிறார்கள்.

Vadam

டி.இமான் பின்னணி இசையில் முடிந்த வரை கிராமத்து ஃபிளேவரை சேர்க்க முயன்றிருக்கிறார். பாடல்கள் எல்லாம் முன்பு அவர் இசையிலேயே கேட்ட உணர்வு, எதுவும் மனதில் ஒட்டவில்லை என்பது சோகம். மஞ்சுவிரட்டு காட்சிகளில் சுவாரசியம் சேர்க்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார். இயல்பாக இல்லாத திரைக்கதையை ஒரு கோர்வைக்குள் கொண்டுவர உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சபு ஜோசப்.

Vadam

காளை வளர்ப்பில் உண்டாகும் ஈகோ, காதலால் உருவாகும் பகை என இரு களங்களை எடுத்துக் கொண்டு, அதை அழுத்தம் எதுவும் இல்லாமல், சுவாரஸ்யமும் சேர்க்காமல் படமாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பெரிய மைனஸ். முக்கியமான விஷயத்தை செய்யப் போகும் கதாப்பாத்திரத்தை முதல் காட்சியிலேயே யூகித்து விட முடிகிறது. தொடர்ந்து வரப்போகும் திருப்பங்களும் எளிதில் தெரிந்துவிடுகிறது. எனவே உணவுபூர்வமாகவும் படம் கனெக்ட் ஆகாமல், சுவாரஸ்யமான திருப்பங்களும் இல்லாமல் தள்ளாடுகிறது படம்.

வடமஞ்சு என்ற புது களத்துடன் வாடிவாசலை கடந்து வந்தைப் போல, படத்தில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால்  பிடிமாடு ஆகி இருக்காது இந்த `வடம்'.