Tiger Nageswara Rao
Tiger Nageswara Rao Twitter
திரை விமர்சனம்

Tiger Nageswara Rao MOVIE REVIEW | நான்-லீனியர் யுத்தியில் ரவி தேஜாவிடமிருந்து ஒரு ஆச்சர்யம்!

Johnson

பிரதமர் வீட்டிலேயே கொள்ளையடிக்கப் போகிறேன் என்ற கடிதம் அரசாங்கத்தை உலுக்குகிறது. கடிதத்தை அனுப்பியது ஸ்ட்ரூவர்ட்புறம் நாகேஷ்வர ராவ் (ரவி தேஜா). யார் இந்த கொள்ளையன்? பிரதமர் வீட்டையே கொள்ளையடிக்க திட்டமா என பதறும் அதிகாரிகள் அவரைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

ஸ்ட்ரூவர்ட்புறம் என்ற ஊரும், அங்கு வளர்ந்து 80களில் மிகப்பெரிய கொள்ளையனாக வளர்ந்து நிற்கும் நாகேஷ்வரராவின் கதையும் மெல்ல மெல்ல விரிகிறது.

Tiger Nageswara Rao

எட்டு வயதிலேயே தன் தந்தையை கொன்றது, போலீஸிடம் நாள் தேதி இடம் சொல்லி வெள்ள நிவாரணத்துக்காக அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகளை ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையடித்தது, தன்னுடன் வர மறுத்த பாலியல் தொழிலாளியை தாக்கியது, 24 பேரை கொன்று குவித்தது என மிகக் குரூரமான கதைகளை விவரிக்கிறார் அந்த சரகத்தை சேர்ந்த காவலதிகாரி.

இப்பேர்பட்ட நபர் பிரதமர் வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் என்பது தேசிய பாதுகாப்புக்கே ஆபத்து என நாகேஷ்வர ராவை தேடி பிடித்து கொலை செய்ய உத்தரவு வருகிறது. யார் இந்த நாகேஷ்வர ராவ் என அறிந்து கொள்ள ஸ்ர்ட்ரூவர்ட்புறம் புறப்படுகிறார் உளவுத்துறை அதிகாரி ராகவேந்திர ராஜ்புத் (அனுபம் கேர்). அவரைப் பற்றிய உண்மைகள் என்ன? ஏன் இதை எல்லாம் செய்கிறார்? ஸ்ட்ரூவர்ட்புறம் நாகேஷ்வர ராவ் எப்படி டைகர் நாகேஷ்வர ராவ் ஆனார்? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.

ரவி தேஜா தன்னுடைய ட்ரேட் மார்க் ஸோனில் இருந்து சற்றே விலகி ஃபுல் சீரியஸ் மோடில் இறங்கியிருக்கிறார். மாஸ் காட்சிகளில் வழக்கம் போல் அசத்துகிறார், சில எமோஷனல் காட்சிகளில் முடிந்த வரை நடிப்பை கொடுத்திருக்கிறார்.

Tiger Nageswara Rao

டைக்ரின் நண்பர் கதாபாத்திரமான யாரி ரோலில் நடித்திருந்த கிஷோர்குமாரின் நடிப்பு பல இடங்களில் சிறப்பு. ஒரே சீனில் அசால்ட்டாக நாசர் தன்னுடைய சீனியாரிட்டியை நிரூபிக்கிறார். ஹரீஷ் பெரேடி, ஜிஷு சென்குப்தா கதாபாத்திரங்கள் வில்லத்தனமாக இருந்தாலும் பெரிய அளவு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.

அனுபம் கேருக்கு ஒரு எக்ஸ்டண்டட் கேமியோ ரோல், அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் இன்னும் மூன்று ஹீரோயின்கள், பல துணைக் கதாபாத்திரங்கள் இருந்தும் யாரும் மனதில் பதியவில்லை.

இந்தக் கதையை சொல்ல.. நான்-லீனியர் யுத்தியை எடுத்து, வம்ஸீ, ஸ்ரீகாந்த் இருவரும் எழுதிய திரைக்கதை படத்தின் பெரும் பலம். குறிப்பாக நாயகனைப் பற்றிய இருவேறு பார்வைகளை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படத்தை சுவாரஸ்ய படுத்துகிறது. நாயகனை பற்றி சொல்லப்படும் ஒவ்வொரு கதைகளும் முடிக்கப்படும் விதமும் ரசிக்கும்படி இருந்தது.

ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை திருடர்கள் பட்டம் கட்டி, அவர்களை திருடர்களாகவே வாழ தள்ளும் அதிகாரிகள் பற்றி சொல்வது, அம்பேத்கரை முன்னிலைப்படுத்தி, அவரால் பலரும் கல்வி கற்றார்கள், கல்விதான் நம் எதிர்காலத்தை மாற்றும் கருவி என சொல்லும் இடங்கள் சபாஷ்.

அம்பேத்கர்

ஆர்.மதியின் ஒளிப்பதிவு அட்டகாசம். சண்டைக்காட்சிகள், கொள்ளையடிக்கும் காட்சிகள் எல்லாவற்றையும் அவருடைய கேமிராவால் சுவாரஸ்யப்படுத்துகிறார். ராம் - லக்‌ஷ்மண், பீட்டர் ஹெய்ன், ஜோச்ஜ்வா, வெங்கர், ராகுல், நிகில் ஆகிய மாஸ்டர்களின் கைவண்ணத்தில் சண்டை வடிவமைப்பு பரபரப்பைக் கூட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் அவ்வளவு ஈர்க்கவில்லை, ஆனால் சில காட்சிகளில் பின்னணி இசை தரமாக இருக்கிறது.

படத்தின் தேவையற்ற காட்சிகள், ஓவர் ட்ராமா, அதீத புனைவுதான் படத்தை பின்னிழுக்கும் காரணிகள். முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் படு காமெடியாக, அர்த்தமற்றதாக இருக்கிறது.

ஒரு கதாபாத்திரம் மையக்கதைக்கு தேவை இல்லை என்றாலும் கதைக்குள் திணித்திருந்ததால், அது படத்துடன் ஒட்டவில்லை. நாகேஷ்வர ராவ் குடும்பம் சார்ந்த காட்சிகள் இன்னும் இயல்பாய் இருந்திருக்கலாம்.

கூடவே இது நிஜமாக வாழ்ந்த ஒரு நபரை மையமாக வைத்து புனையப்பட்ட கதை. அதற்குள் புனைவு ரொம்பவே அதீதமாகிவிட்டது.

Real Life Tiger Nageswara Rao

மேலும் நாகேஷ்வரராவ் பற்றிய நரேஷனும் படத்தின் பல காட்சியமைப்பும் பார்க்கும் போது இந்திய சினிமாவில் இன்னும் `கே.ஜி.எஃப்’ ஹேங்க் ஓவர் குறைய எத்தனை வருடமாகுமோ? என யோசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ரவி தேஜா இந்த அளவு கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யம். அதே சமயம் படத்தின் சில பழுதுகளை நீக்கி, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் (2 மணிநேரம் 52 நிமிடங்கள்) ஓடும் படத்தின் நீளத்தை இன்னும் காம்பேக்ட் ஆக்கியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். என்றாலும் விறுவிறுப்பான ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம்.