Chithambaram Balan
திரை விமர்சனம்

தாய் பாசம் பேசும் த்ரில்லர் கதை... `பாலன்' எப்படி இருக்கிறது? | Balan Review | Chithambaram

புதிய ஊர், புதிய பெயர் என தன் மகனுடன் செல்லும் அந்தப் பெண்ணின் பயணத்தை பதிவு செய்த விதமும், மெல்ல மெல்ல கதைக்குள் நம்மை அழைத்து சென்ற விதமும் அற்புதமான அனுபவம்.

Johnson

தாயும், மகனும் வாழ்க்கைக்காக நடத்தும் போராட்டமே கதை.

சிறையிலிருந்து விடுதலையாகும் பெண் (ஃபர்ஸானா) தன் மகனுடன் வெளியே வந்து பல வேலைகளை செய்கிறார். தன்னுடைய கடந்த காலம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக யாராவது அவருடன் நெருங்கி பழகத் துவங்கினால் அந்த ஊரிலிருந்து கிளம்பிவிடுவார். புது ஊர், புது பெயர், வேறு கதை. அப்படி சுற்றி திரியும் அவருக்கும் அவரது மகனுக்கும் ஒரு அடைக்கலம் கிடைக்கிறது. வயதான பாட்டி ஒருவரை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு, அங்கேயே தாங்கிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு. வேலைக்கு சேர்கிறார் அந்த பெண். இனிமேல் எங்கும் செல்ல தேவை இல்லை என்ற அளவுக்கு அந்த இடத்தில் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிறது. தாயும் மகனும் பிரிகின்றனர். இதன் பின்னர் என்ன ஆனது என்பதே பாலன்.

தாய் வேடத்தில் வரும் ஃபர்ஸானா நடிப்பு இப்படத்துக்கு மிகப்பெரிய பலம். புதிய மனிதர்கள் கண்டு பதற்றமாவது, அவர்களை விட்டு விலகுவது என அவரிடம் இருக்கும் தவிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பளிச் என தெரிகிறது. மகனிடம் பாசத்தோடு பழகும் காட்சிகளிலும் அவ்வளவு அழகு. குழந்தை நட்சத்திரம் ஆதிசேஷன், மற்றும் பதின் வயது சிறுவன் முகமது ஸியான் இருவரின் நடிப்பும் மிகச்சிறப்பு. காவலதிகாரியாக வரும் ஜீன் பால் லால் காட்டும் வித்தியாசமான வில்லத்தனமும் மிரட்டுகிறது.

Balan

படத்தின் முதல் பாதி கொண்டு செல்லப்பட்ட விதமும் மிகப்பெரிய பலம். புதிய ஊர், புதிய பெயர் என தன் மகனுடன் செல்லும் அந்தப் பெண்ணின் பயணத்தை பதிவு செய்த விதமும், மெல்ல மெல்ல கதைக்குள் நம்மை அழைத்து சென்ற விதமும் அற்புதமான அனுபவம். அந்தப் பெண் தப்பி ஓடும் பகுதி வரை விறுவிறுப்பாக செல்வதும் அதன் பின் அவளது வாழ்க்கையை போலவே இயல்பான வேகத்துக்கு படமும் மாறுவதுமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜித்து மாதவனின் எழுத்தில் பல உணர்ச்சிகரமான விஷயங்கள் மிகவும் சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டு உரிமையாளரிடம் இந்தப் பெண்ணும் குழந்தையும் நெருக்கமாகும் காட்சிகளும் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. அதனை காட்சிகளாக அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் சிதம்பரம் (Manjummel Boys).

சைஜூ காலித் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் மர்மமான உணர்வை கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுஷின் ஷ்யாம் பாடல் மற்றும் பின்னணி இசை படத்தின் எமோஷனுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

Balan

இப்படத்தின் குறைகள் என பார்த்தால், முதல் பாதியில் இருந்த அந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் அப்படியே டிராக் மாறுகிறது. அந்த சிறுவனுக்கும் போலீஸுக்குமான மோதலை மையப்படுத்தியதில் சுவாரசியம் எதுவுமே இல்லை. மேலும் போலீஸின் பகைக்கும், பழி உணர்ச்சிக்கும் வலுவான காரணம் சொல்லப்படவில்லை. போலீஸ், திருடன் என கதை திசைமாறிய பின்னர் படத்தில் சுவாரசியம் எதுவும் இல்லாமல் போகிறது. க்ளைமாக்ஸில் வரக்கூடிய டிவிஸ்ட் அசத்தினாலும் இடைவேளையில் இருந்து முடிவு வரைக்குமான படம் பெரிய அளவில் கவரவில்லை. முதல் பாதி முழுக்க மூன்றே முக்கிய பாத்திரங்கள் தான், அதை வைத்து சுவாரஸ்யமாக கதை நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் பல பாத்திரங்கள் இருந்தும் திணறி இருக்கிறார்.

மொத்தத்தில் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் நல்ல அனுபவம் வழங்கி இருக்கும்.