குழந்தை காணாமல் போன வழக்கில் அவிழும் மர்மங்களே `காளிதாஸ் 2'
2025 டிசம்பர் 31 அன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. அவ்வழக்கை விசாரிக்க வருகிறார் காவலர் காளிதாஸ் (பரத்). குழந்தையின் அம்மா சஞ்சு (அபர்ணதி), அப்பா கோகுல் (அனந்த் நாக்) ஒருபுறம் பதற, அங்குள்ளவர்கள் அழுத்தத்தால் உயரதிகாரி ஏசி வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். கண்டிப்பாக குடியிருப்பை சார்ந்தவர்களில் யாரோ தான் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என பலரை சந்தேகிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மாற்றி ஒருவராக சந்தேகம் நீள்கிறதே தவிர குற்றவாளி மாட்டவில்லை. ஆதாரம் இல்லை என்றாலும் அங்கிருக்கும் ஸ்டீபன் தான் (அஜய் கார்த்தி) இதனை செய்திருக்க வேண்டும் என நம்புகிறார் வைஷ்ணவி. அது ஏன்? குழந்தைக்கு என்ன ஆனது? குற்றவாளி சிக்கினாரா? என்பதை எல்லாம் சொல்கிறது இந்த `காளிதாஸ் 2'.
2019ல் வெளியான காளிதாஸ் படத்திலிருந்து அந்த பாத்திரத்தை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு, இந்த பாகத்தில் வேறு ஒரு வழக்கில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். அதனை முடிந்தவரை பல திருப்பங்களுடன் கொடுக்கவும் முயன்றிருக்கிறார்.
பரத் ஒரு காவலதிகாரி ரோலில் பொருந்திப் போகிறார். விசாரிக்கும் விதம், தயங்கி நிற்கும் இடங்கள் என முடிந்த அளவு நல்ல நடிப்பை கொடுக்கிறார். உயர் அதிகாரியாக வரும் பவானி ஸ்ரீ இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கலாம். ஸ்டீபன் ரோலில் வரும் அஜய் கார்த்திக், இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரோ. தமிழில் பல வருடங்கள் கழித்து காம்பேக் கொடுத்திருக்கும் சங்கீதாவுக்கு வெல்கம் பேக். அவரது ரோலுக்கு மிகவும் பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். கெஸ்ட் ரோலில் வரும் பிரகாஷ் ராஜ், கிஷோர் அசால்ட்டாக தங்களுக்கு கொடுத்திருக்கும் வேலையை முடித்திருக்கிறார்கள்.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் வித்தியாசமாக செய்கிறேன் என ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். அவை எதுவும் ரசிக்கும்படி இல்லை என்பதுதான் சோகம். சாம் சி எஸ் இசை படத்தில் இல்லாத த்ரில்லை தனியாக ஏற்ற முயற்சிக்கிறது. மேலும் படத்தில் வரும் சண்டைக்காட்சிகள், சேசிங் காட்சிகள் அத்தனையும் மிகப்பெரிய சலிப்பை தருகின்றன.
இப்படத்தின் குறைகள் என்றால் கண்டிப்பாக திரைக்கதைதான். ஒரு சம்பவம், அதை செய்தது யார் என்ற மர்மம், பல கதாபாத்திரங்கள் மேல் சந்தேகம் என whodunit களத்துக்கான எல்லாம் இருந்தாலும், சுவாரஸ்யமான திருப்பங்கள் எதுவும் இல்லாமல் தள்ளாடுகிறது படம். வெறுமனே எல்லோர் மேலும் சந்தேக பார்வை வரவழைப்பதற்காக மிக கன்வீனியட்டாக எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் பவானி ஸ்ரீ பாத்திரம் மட்டும் இல்லை என்றால் கொலைகாரர் யார் என்பது 1 மணிநேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கொலைகாரர்கள் போலீசை அலைக்கழிப்பதை போல, இங்கு ஒரு போலீஸ் பாத்திரத்தின் மூலம் கொலைகாரரை நெருங்க விடாமல் அலைகழித்திருக்கிறார்கள். தேவை இல்லாமல் போலீஸ் பாத்திரம், வலிந்து திணிக்கப்பட்ட ஸ்டீபன் பாத்திரம் என ஏகப்பட்ட பிரச்சனைகள்.
மொத்தமாக பார்த்தால் கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால், கடந்த பாகம் போல கொஞ்சமேனும் நல்ல த்ரில்லர் படமாகவாவது வந்திருக்கும்.