Arya Ananthan Kaadu Review
திரை விமர்சனம்

அரசியல் + ஆக்‌ஷன் படமாக கவர்கிறதா அனந்தன் காடு? | Ananthan Kaadu Review | Arya

பரபரப்பான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணமூர்த்தி.

Johnson

இழப்புக்காகப் பழிவாங்கச் செல்லும் இளைஞனின் கதை!

கோவாவில் மகளின் திருமணக் கொண்டாட்டத்தில் இருக்கும் சம்பத் ராவை (சுனில்) துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர் சிலர். இங்கிருந்து முன் கதை துவங்குகிறது. 1989ஆம் ஆண்டு இலங்கைப் போரில் தனது குடும்பத்தை இழந்த வெற்றி (ஆர்யா) தப்பிப் பிழைத்து இந்தியாவில் தஞ்சமடைகிறார். கேரள முதல்வருக்குக் கூலிப்படையாக இயங்கி இப்போது இசைக் குழு நடத்திவரும் கிருஷ்ணன் குட்டி (இந்திரன்ஸ்) அணி அவருக்கு ஆதரவு தருகிறது.

Ananthan Kaadu

முதல்வருக்காக, கடைசியாக ஒரு சம்பவம் செய்ய வேண்டிய சூழல் இந்த அணிக்கு வருகிறது. முதலில் தயங்கினாலும், பின்பு அதனை வெற்றியின் துணையோடு செய்து முடிக்கிறார்கள். இதன்பின் அவர்களுக்குப் பெரிய பிரச்னை வருகிறது. அதிலிருந்து தப்பினார்களா? வெற்றி பெற்றது யார்? என்பதெல்லாம்தான் `அனந்தன் காடு' படத்தின் மீதிக்கதை.

பரபரப்பான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணமூர்த்தி. அரசியல் பழிவாங்கல், துரோகம், அதிகாரப்போட்டி என கதை, பல்வேறு விஷயங்களை கலந்து சொல்லப்படுகிறது.

Arya

நடிப்பைப் பொறுத்தவரை ஆர்யா தன் வழக்கமான நடிப்பைக் கொடுக்கிறார். குடும்பத்தை இழந்து ஆக்ரோஷமாகச் சண்டை போடுவது, நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு உதவ முடியாமல் தவிப்பது, வெறியோடு பழிவாங்குவது என ஆக்‌ஷன் போர்ஷனில் சிறப்பாக நடிக்கிறார். கேங் லீடராக இந்திரன்ஸ் தன் மிடுக்கான நடிப்பால் கவர்கிறார். ஒரே வார்த்தையில் குழுவினரைக் கட்டுப்படுத்துவது, இறுதியில் எமோஷனல் முடிவு எடுப்பது என அவர் வரும் காட்சிகள் வெகு சிறப்பு. முரளி கோபி, அக்‌ஷய்குமார், தேவ் மோகன், போஸ் வெங்கட் போன்றோரின் நடிப்பிலும் குறை எதுவும் இல்லை. சுனில் மிகவும் வழக்கமான வில்லன் ரோலில், வழக்கமான நடிப்பைக் கொடுத்துள்ளார். நிகிலா விமல், ரெஜினா ஆகியோருக்கு படத்தில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.

ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா மிகத் தரமாக காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம் சேர்க்கிறது. இப்படத்தின் குறைகள் என்றால் சுவாரஸ்யமற்ற திரைக்கதைதான். படம் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் அதில் எந்தப் புதுமையும் இல்லை, எளிதில் யூகிக்க முடிவதாகவும் இருக்கிறது.

Arya

பல்வேறு காரணங்களால் போராளிகளாகவும், கூலிப்படையாகவும் மாறியவர்களுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது எனப் பேச முயன்ற விஷயம் அழுத்தமானதுதான். ஆனால் அதனைச் சொன்ன விதம்தான் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்கிறது.
அழுத்தமான விஷயத்தைப் பேச நினைத்ததுபோல, படத்தையும் சுவாரஸ்யமாகக் கொடுக்க நினைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.