த்ரிஷா, மன்சூர் அலிகான்
த்ரிஷா, மன்சூர் அலிகான் ட்விட்டர்
சினிமா

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் நாளை ஆஜராக காவல்துறை சம்மன்

webteam

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து த்ரிஷா, ”அவர் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவருடன் இனிமேல் சேர்ந்து நடிக்கமாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் - த்ரிஷா - மன்சூர் அலிகான்

இதைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு எதிராகப் பல்வேறு அமைப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அவரை, நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில் விளக்கமளித்த மன்சூர் அலிகான், “நான் எப்போதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

மன்சூர் அலிகான்

தொடர்ந்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 IPC ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் நாளை (23.11.2023) விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.